நமது சமூகத்தில், ஒரு பெண் திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்லும் போது, அவரது பெற்றோர் அன்புடன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம், நிலம், வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை வழங்குவது வழக்கமாக உள்ளது. பொதுவாக இவை அனைத்தும் “சீதனம்” என்று அழைக்கப்படுகின்றன.
ஆனால், இந்த சீதனம் பெண்ணுக்கே சொந்தமா, அல்லது கணவர் வீட்டாருக்கும் அதில் உரிமை இருக்கிறதா என்ற சந்தேகம் பலரிடமும் காணப்படுகிறது.
சட்டப்படி பார்த்தால், திருமணத்தின் போது பெண் கொண்டு வரும் சீதனம் முழுமையாக அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படுகிறது. அதாவது, நகைகள், பணம், நிலம், வீடு அல்லது வேறு எந்தச் சொத்தாக இருந்தாலும், அதன் உரிமையாளர் அந்தப் பெண்ணே. கணவர், மாமியார், மாமனார் அல்லது வேறு யாரும் அதற்கு உரிமை கோர முடியாது.
பெண்ணின் சம்மதத்துடன் மட்டுமே மற்றவர்கள் அந்தச் சொத்துகளை பயன்படுத்த முடியும். இல்லையெனில், நகைகள் அவர்களுடைய வீட்டுப் பீரோவிலோ அல்லது லாக்கரிலோ இருந்தாலும், அதன் உரிமை அந்தப் பெண்ணுக்கே சொந்தமானதாகும்.
சீதனப் பொருட்களை திருப்பிக் கொடுக்க மறுத்தால், அதற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita) சட்டத்தின் பிரிவு 316-ன் படி, மற்றொருவரின் சொத்தை முறையற்ற வகையில் வைத்திருப்பது நம்பிக்கை மோசடி குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
அதேபோல், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழும், ஒரு பெண் தனது சீதனம் மற்றும் பிற உடைமைகளை மீட்டுத் தருமாறு நீதிமன்றத்தை அணுக முடியும்.
முதலில் சட்ட நோட்டீஸ் அனுப்பலாம். அதற்கும் பதில் கிடைக்காவிட்டால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். தேவைப்பட்டால், தனது சீதனத்தை மீட்டுத் தரக் கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியும்.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், “சீதனம்” மற்றும் “வரதட்சனை” இரண்டும் ஒன்றல்ல.
வரதட்சனை என்பது மாப்பிள்ளை தரப்பினர் கேட்டு பெறுவது. 1961-ஆம் ஆண்டின் வரதட்சனைத் தடுப்பு சட்டத்தின் கீழ், வரதட்சனை கேட்பது சட்டவிரோதமான செயலாகும்.
ஆனால், சீதனம் என்பது பெண்ணின் குடும்பத்தினர் தங்களது விருப்பத்தின்படி, பெண்ணின் நலனுக்காக வழங்கும் சொத்தாகும்.
எனவே, ஒரு பெண் திருமணத்தின் போது கொண்டு வரும் சீதனத்தின் உரிமை எப்போதும் அந்தப் பெண்ணுக்கே சொந்தமானது என்பதையே சட்டம் தெளிவாக கூறுகிறது.
