விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்று பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஊழலற்ற, சுத்தமான ஆட்சியை வழங்கி வருவதாகக் கூறிய அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) மக்கள் ஆதரவு அளித்தால், அடிப்படை வசதிகள் தொடர்பான அனைத்து குறைகளும் விரைவாகத் தீர்க்கப்படும் என்று வலியுறுத்தினார்.
பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக, பள்ளிகளுக்கு அருகிலும், கோயில்களுக்கு அருகிலும் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடைகள் குறித்து பலரும் புகார் தெரிவித்தனர்.
அந்தக் கோரிக்கைகளை ஏற்று, சிவகாசியில் செயல்பட்டு வந்த எட்டு டாஸ்மாக் கடைகளை முதலமைச்சர் விஜய் உங்களுக்காக மூட உத்தரவிட்டுள்ளார். இதைவிட பெரிய சாதனை வேறு என்ன இருக்க முடியும்? இதற்கு முன்பு இருந்த எந்த அரசும் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
பெண்களின் பாதுகாப்புக்கு முதலமைச்சர் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதனால்தான் இந்த நடவடிக்கை முதன்முறையாக எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மக்களின் நலனுக்காக இன்னும் பல திட்டங்களையும், பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகளையும் அவர் செயல்படுத்த உள்ளார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் மீண்டும் விசில் சின்னத்திற்கு வாக்களித்தால் மட்டுமே, குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால், நல்ல தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக நீங்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற முடியும்.
தற்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்களை அளித்து வருகின்றனர். எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் பொதுமக்களுக்காக திறந்து செயல்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 400 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், சட்டமன்ற உறுப்பினரின் அதிகார வரம்பிற்குள் தீர்வு காணக்கூடிய 39 மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், உள்ளாட்சி அமைப்புகளில் நமக்கு மக்கள் பிரதிநிதிகள், குறிப்பாக கவுன்சிலர்கள் இல்லாத காரணத்தால், குடிநீர், சாலை உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் சிரமம் நிலவுகிறது. இன்னும் ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீங்கள் விசில் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், இந்த மாற்றத்தை மேலும் தொடர்ந்து கொண்டு சென்று, மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைந்து நிறைவேற்றுவோம்” என்று அமைச்சர் கீர்த்தனா கேட்டுக்கொண்டார்.
