நீலகிரி மாவட்டம் உதகை அருகே, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி கிராமப் பகுதியில், சமீப நாட்களாக இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று இரவு மசினி அம்மன் கோவில் அருகே உள்ள ரேஷன் கடைக்குள் புகுந்த காட்டு யானை, கடையின் கதவை உடைத்து அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து சாப்பிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சைரன் ஒலி எழுப்பி யானையை விரட்டினர். அப்போது அரிசி மூட்டையை வாயில் கவ்வியபடி காட்டு யானை அங்கிருந்து ஓடியது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதே பகுதியில் சுற்றித்திரிந்த யானையை, வனத்துறையினர் பின்னர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
மசினகுடி கிராமத்தில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டு யானை, ரேஷன் கடையை சேதப்படுத்தி அரிசி மூட்டைகளை சாப்பிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இரவு நேர ரோந்து பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
