Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியல் வட்டாரத்தையே உலுக்கி வரும் த.வெ.க. எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில், தற்பொழுது சர்வதேச அளவிலான அதிரடி நடவடிக்கைகளைச் சென்னை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. த.வெ.க எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சிங்கப்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் லட்சுமண பெருமாளுக்கு எதிராக சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் (Lookout Circular) பிறப்பித்துள்ளது.

தமிழக அரசைத் தள்ளாட வைக்கும் நோக்கில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம், சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் ஒன்றின் போது எதிராக வாக்களிக்க ₹35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, தியாகராஜன், நரேஷ் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சதித்திட்டத்தில் சிங்கப்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் லட்சுமண பெருமாள் முக்கியப் பங்கு வகித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் சிங்கப்பூரில் இருந்தபடியே, வழக்கிற்கு முக்கியமான ஹோட்டல் சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) உரையாடல்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து, அவர் இந்தியாவிற்குள் நுழைவதையோ அல்லது வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்வதையோ தடுக்கவும், விசாரணைக்காக அவரை கைது செய்யும் நடவடிக்கையை எளிதாக்கவும், லுக் அவுட் நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள குடியுரிமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago