பிரச்சாரத்தில் எதிரும் புதிருமாய் இருந்த உதயநிதியும்- எடப்பாடி பழனிசாமியும் சட்டசபையில் நெருங்கிய தோழர்களாக மாறிவிட்டார்கள். 50 ஆண்டுகளில் முதல் முறையாக திமுகவும், அதிமுகவும் சட்டமன்ற துணை எதிர்க்கட்சி வரிசையில் ஒன்றாக உட்கார்ந்திருக்கிறார்கள். அத்துடன் சட்டசபையில் எலியும், பூனையுமாக இருந்த இரண்டு கட்சிகளும் நட்பு பாராட்டுவதை கோட்டையில் எட்டாவது அதிசயமா பார்க்கிறார்கள்.
சட்டசபைக்கு வந்தவுடன் உதயநிதியை பார்த்து வணக்கம் வைக்கும் எடப்பாடி பழனிசாமி, தனக்கு அருகில் உட்கார்ந்திருந்த திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் சிரித்து சிரித்துப் பேசினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு தங்கம் தென்னரசு சில ஐடியாக்களை எடப்பாடிக்கு கொடுத்து அதை பேசச் சொல்லி இருக்கிறார்.
அதற்கு முந்தைய நாளில் சபாநாயகரை வாழ்த்திப் பேச குறிப்பு எதையுமே தயார் செய்யாமல் வந்து இருக்கிறார். எ.வ.வேலுவிடம் எழுதுவதற்கு சில பேப்பர்களை கேட்டுள்ளார். அவரோ, ‘ஒன்று போதுமா? ரெண்டு தாள் வேணுமா?” என அக்கறையாக கேட்ட எ.வ.வேலு ரெண்டு பேப்பரை கொடுக்க, அதில் குறிப்பெடுத்து தான் சபாநாயகரை வாழ்த்தி பேசினாராம் எடப்பாடி. இதைப் பார்த்து அதிமுக எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏக்களிடம் சகஜமாக பேச ஆரம்பிக்க, திமுக எம்எல்ஏக்களும் ஒரு படி மேலே போய் ரத்தத்தின் ரத்தங்களுடன் வலிய பேசி உள்ளுக்குள்ள ஒன்றாகி விட்டார்களாம்.
நண்பேன்டா..!
