https://republictn.com/

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் புகழ்பெற்ற மவுண்ட் ரஷ்மோர் மலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னாள் அதிபர்களின் சிலைகளுடன் தனது முகமும் செதுக்கப்பட்டிருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வ ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மவுண்ட் ரஷ்மோர் மலையில் அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபர்களாகக் கருதப்படும் ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் ஆப்ரஹாம் லிங்கன் ஆகிய நால்வரின் முகங்கள் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த ஏஐ புகைப்படம், அந்த வரிசையில் தானும் ஒரு தலைசிறந்த அதிபர் என்பதைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், இந்தப் புகைப்படம் உலகளவில் பெரும் விவாதத்தையும் சமூக வலைதளங்களில் வைரலான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், டிரம்ப் இந்த ஏஐ புகைப்படத்தை எந்தவித விளக்கக் குறிப்பும் (Caption) இன்றி தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதலே மவுண்ட் ரஷ்மோர் மலையில் தனது முகமும் இடம்பெற வேண்டும் என்பது தனது விருப்பம் என டிரம்ப் பலமுறை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

மேலும், தனது பிம்பத்தை ஒரு மாபெரும் தலைவராக வெளிப்படுத்தும் நோக்கில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படங்களை வெளியிடுவது டிரம்புக்கு புதிதல்ல. சமீபத்தில் அவர் தன்னை ராணுவ சீருடையில் போர் எச்சரிக்கை விடுப்பது போன்ற தோற்றத்திலும், அதற்கு முன்பு இயேசு கிறிஸ்து மற்றும் போப் போன்ற தோற்றங்களிலும் சித்தரிக்கும் ஏஐ படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago