அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த ஈரான் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) உயிருடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரான் உயர்தலைவர் மோஜ்தபா கமேனியின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க தரப்பில் இருந்து விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழு கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தாக்குதலில் படுகாயமடைந்த கமேனி உயிருடன் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிக செயல்பாட்டு திறனுடன் அவர் செயல்பட்டு வருவதாகவும் ரூபியோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் குறித்தாக பரவியிருந்த மரண வதந்திகள் மறுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்ற கூட்டுத் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் மோஜ்தபா கமேனி புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றதாக கூறப்பட்டது.
தாக்குதலில் படுகாயமடைந்ததால் கடந்த மூன்று மாதங்களாக அவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக பல்வேறு வதந்திகள் பரவின. இதனை தற்போது அமெரிக்கா மறுத்துள்ளது.
அவர் தற்போது உயிருடன் இருந்து, நாட்டின் முக்கிய வியூகங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் அதிக செயல்பாட்டுடன் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களால், அவர் மின்னணு தொடர்புகள் இல்லாத பாதுகாப்பான இடங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், நம்பகமான தூதர்கள் மற்றும் எழுத்துப்பூர்வ குறிப்புகள் மூலமாகவே தொடர்புகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
