மகாராஷ்டிராவில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரை ஒட்டிய பிம்பரி சின்ச்வாட் என்ற புறநகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு கள்ளச்சாராயம் அருந்தியதால் 18 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கண்பார்வை இழந்து, சுவாசக் கோளாறு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பகுதியிலே பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் காவல்துறையின் அலட்சியமே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்றதும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்ததாக வான்கடே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு முதல் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
