தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், முந்தைய திமுக ஆட்சியின் ஊழல், முறைகேடுகள் மீது சாட்டையைச் சுழற்றத் தொடங்கியுள்ளார். குறிப்பாக திமுகவின் 7 முக்கியத் தூண்களாகக் கருதப்படும் மண்டலத் தளகர்த்தர்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் க்ளீன்-அப்’ தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல் துறை, உளவுத்துறையின் ரகசியக் கண்காணிப்பு வளையம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைகளால் மிரண்டு போயிருக்கும் திமுகவின் முக்கியப் புள்ளிகள், தங்களின் ரகசியப் பேச்சுவார்த்தைகள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காகப் புதிய தொழில்நுட்ப உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.
சென்னை ஹோட்டல்களில் ரகசிய மீட்
ஆட்சி அதிகாரம் கையை விட்டுப் போனாலும், தங்களின் அரசியல் செல்வாக்கைத் தக்கவைக்கவும், வரவிருக்கும் தேர்தல் வியூகங்களை வகுக்கவும் சென்னை நகரின் முக்கிய நட்சத்திர ஹோட்டல்களில் திமுக புள்ளிகள் ரகசியக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், சென்னை மாநகரக் காவல் துறையின் சிறப்புப் பிரிவினர், உளவுத்துறையினர் இந்த ஹோட்டல் சந்திப்புகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். யார் யாருடன் பேசுகிறார்கள், என்னென்ன மாஸ்டர் பிளான்கள் தீட்டப்படுகின்றன என்ற விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாட்ஸ் ஆப் வேண்டாம்… ஃபேஸ் டைம் மட்டுமே
அரசுத் தரப்பில் தங்களது தொலைபேசி அழைப்புகள், மொபைல் நெட்வொர்க்குகள் கண்காணிக்கப்படலாம் என்ற அச்சம் தற்போது திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் முதல் முக்கிய விஐபிக்கள் வரை தொற்றிக்கொண்டுள்ளது.
இதன் விளைவாக, அவர்கள் தங்களின் வழக்கமான தொலைபேசி அழைப்புகளையோ அல்லது வாட்ஸ்ஆப் கால்களையோ முற்றிலுமாகத் தவிர்த்து வருகின்றனர். மாறாக, ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஃபேஸ் டைம்’ ஆடியோ, வீடியோ கால்களை மட்டுமே தங்களின் பிரதான தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
காரணம் என்ன?
வாட்ஸ்ஆப் அழைப்புகள் உளவுத்துறை மென்பொருள்கள் மூலம் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபேஸ் டைம் அழைப்புகளை அவ்வளவு எளிதில் இடைமறித்துக் கேட்கவோ அல்லது ஆடியோ ரெக்கார்ட் செய்யவோ முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே இதற்குக் காரணம்.
உளவுத்துறையின் வலையில் ‘விஐபி’களின் ரகசியங்கள்
தொழில்நுட்ப ரீதியாக திமுகவினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றாலும், சென்னை சிட்டி கமிஷனர் தலைமையிலான சிறப்புப் பிரிவு போலீசார் தங்களின் மனிதவள உளவு நெட்வொர்க்கை பல மடங்கு அதிகரித்துள்ளனர்.
முக்கிய புள்ளிகளின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள், உதவியாளர்கள், அவர்களின் காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரெல்லாம் விஐபி இடங்களுக்கு வந்து செல்கிறார்கள் என்ற விவரங்கள் அனைத்தும் போலீஸ் விசாரண வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சில குறிப்பிட்ட முறைகேட்டுப் புகார்கள், ஆவணங்களின் அடிப்படையில், ஆதாரங்களைச் சேகரிக்கும் பணி திரைமறைவில் மிக வேகமாக நடந்து வருகிறது.
அந்த 7 பேருக்கு விழும் சம்மட்டி அடி?
செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.என்.நேரு, சேகர்பாபு, அன்பில் மகேஷ், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மூர்த்தி ஆகிய 5 மண்டல டாப் விஐபிக்கள் மீது பாயத் தயாராகும் இந்த ஊழல் ஒழிப்பு அஸ்திரத்திற்கு பயந்துதான், திமுகவின் ஒட்டுமொத்த நெட்வொர்க்கும் இப்போது ‘ஃபேஸ் டைம்’ ரகசியப் பேச்சுவார்த்தைக்குள் தஞ்சம் புகுந்துள்ளது.
“தொழில்நுட்பத்தை மாற்றிப் பேசினாலும், முறைகேடுகளுக்கான ஆதாரங்கள் சிக்கினால் தப்ப முடியாது” என்பதில் முதல்வர் விஜய்யின் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது. திமுகவினர் விரிக்கும் ஃபேஸ் டைம் வலையை, விஜய் அரசின் உளவுத்துறை எப்படி அறுத்தெறியப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக அரசியலின் இந்த ‘சைபர்’ யுத்தம் தற்போது உச்சக்கட்டத்தைக் எட்டியுள்ளது.
