Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கடந்த ஜூலை 3-ஆம் தேதி, தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாக அலுவலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி மெகா சோதனையை நடத்தியுள்ளது.

தற்போதைய தவெக ஆட்சியில் அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டபோதே, அரசியல் விமர்சகர்கள் பலராலும் உற்று நோக்கப்பட்ட ஒரு விஷயம் – நகராட்சி நிர்வாகத் துறை. மக்கள் பணமும், அதிக அளவிலான டெண்டர்களும் புழங்கும், அதே நேரத்தில் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்புள்ள இந்த அதிமுக்கியமான துறையை விஜய் யாருக்கும் தூக்கிக் கொடுக்காமல் தனது தனது வசம் வைத்துக் கொண்டார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, ஒவ்வொரு துறை ரீதியாகவும் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்ட முதல்வர் விஜய், கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் இந்த நகராட்சி நிர்வாகத் துறையில் வழங்கப்பட்ட டெண்டர்கள், ஒதுக்கப்பட்ட நிதிகள், அதில் அரங்கேறியுள்ள குளறுபடிகள் குறித்து ஒரு முழுமையான தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய உயர் அதிகாரிகளுக்குக் கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார்.

முதல்வரின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் கடந்த சில மாதங்களாகத் திரைமறைவில் திரட்டிய ரகசிய ஆவணங்கள், டெண்டர் கோப்புகள், ஆதாரங்கள் அனைத்தும் அண்மையில் முதல்வர் விஜயிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த அதிர்ச்சி அறிக்கையைப் படித்துப் பார்த்த தவெக தலைமை, ஊழல் புள்ளிகளுக்குச் சற்றும் அவகாசம் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது.

ஒரே நேரத்தில் பாய்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை
முதல்வர் கைகளுக்கு ஆதாரங்கள் சென்ற சில நாட்களிலேயே, யாருமே எதிர்பாராத வேளையில் ஜூலை 3-ஆம் தேதி அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்புத் துறையின் தனிப்படைகள் களமிறக்கப்பட்டன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.

சிக்கிய முக்கிய ஆவணங்கள்
கடந்த ஆட்சியில் குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே சாதகமாக விதிகளை தளர்த்தி டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதா? கமிஷன் கைமாறியதா? என்பது குறித்த கோப்புகளை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து, பல முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களையும், ரகசிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

தவெக-வின் அடுத்த மூவ் என்ன?
திமுக ஆட்சியில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்துவிட்டு, தற்போது தவெக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் ஐபிஎஸ் இருப்பதால் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திமுக-விற்கு மிகப்பெரிய நெளிவை ஏற்படுத்தியுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், கடந்த ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையைக் கவனித்த முக்கியப் புள்ளிகள், அவர்களுக்கு நெருக்கமான அதிகாரிகள் மீது அடுத்தகட்டமாகக் கைது நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago