மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான எஸ். காமராஜை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, எஸ்.காமராஜ் தன்னிச்சையாகச் செயல்பட்டு, விஜய் தலைமையிலான தவெகவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். கட்சியின் தலைமையிடம் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த முடிவு அமமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ”கட்சியின் நிலைப்பாட்டை மீறி காமராஜ் செயல்பட்டது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் எதிரானது. தேர்தலில் அவரது வெற்றிக்காகப் பாடுபட்ட அமமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி தொகுதி மக்களுக்கும் அவர் இழைத்த துரோகம் இது.
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு கற்பிக்கும் வகையிலும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.
