2019-ல் இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் திருநாள் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் 279 பேர் உயிரிழந்தனர்
இலங்கையின் முன்னாள் உளவுத்துறைத் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே என்பவருக்கு, இந்தத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் நேரடித் தொடர்பு இருப்பதாக இலங்கை அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை இலங்கையின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டார். அவர் தீவிரவாதிகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்துவதற்கான இடத்தை அடையாளம் காட்டினார் என்றும், தாக்குதல் நடக்கும் வரை அதனை முன்னின்று வழிநடத்தினார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடப்பதற்கு வெறும் மூன்று வாரங்களுக்கு முன்பாக, சுரேஷ் சல்லே சில முஸ்லிம் நபர்களைச் சந்தித்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடம் மற்றும் அங்கு எவ்வளவு மக்கள் கூடுவார்கள் போன்ற முக்கிய விவரங்களைச் சேகரிக்கவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக, இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி புலனாய்வாளர்கள் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். சுரேஷ் சல்லேயிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோத்தபய ராஜபக்சே அதிபராகப் பொறுப்பேற்ற உடனேயே, நாட்டின் மிக முக்கிய உளவு அமைப்பான ‘மாநில உளவுப் பிரிவின்’ (SIS) தலைவராக சுரேஷ் சல்லேவை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் கோத்தபய ராஜபக்சே சந்தேகநபராக அறிவிக்கப்படாவிட்டாலும், அவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஊடகமான ‘சேனல் 4’ இந்தத் தாக்குதல் குறித்து ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், அப்போது நடைபெறவிருந்த அதிபர் தேர்தலைத் தன் பக்கம் திசைதிருப்புவதற்காகவே, இஸ்லாமியத் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்த கோத்தபய ராஜபக்சே தரப்பு அனுமதித்ததாகத் தகவல் வெளியானது.
அதற்கேற்ப, குண்டுவெடிப்பு நடந்த இரண்டு நாட்களிலேயே கோத்தபய ராஜபக்சே தனது தேர்தல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். “இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒடுக்குவேன்” என்ற வாக்குறுதியோடு களமிறங்கிய அவர், அந்தத் தேர்தலில் அமோக வெற்றியும் பெற்றார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சல்லே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் மறுத்து வருகிறார். மேலும், சிறையில் அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த தற்போதைய இலங்கை அரசு, இந்த வழக்கை தீவிரமாக கையில் எடுத்துள்ளதால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
