நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு மத்திய அமைச்சரின் மகனுக்கு எதிரான ‘போக்சோ’ (POCSO) வழக்கின் அதிர்ச்சியிலிருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள், தெலங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தின் மையப்பகுதியிலேயே அரங்கேறியுள்ள மற்றொரு பாலியல் வன்கொடுமைச் சம்பவம், ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் உலுக்கியுள்ளது.
சினிமா ஆசை காட்டி வளைத்த கும்பல்
ஹைதராபாத்தின் விஐபி பகுதியாகக் கருதப்படும் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அருகிலேயே வசித்து வரும் இரண்டு ஆதரவற்ற பெண்கள், சினிமா மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சிறுசிறு வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். இவர்களில் ஒரு பெண்ணுக்கு, தாங்கள் சினிமா துறையில் பெரிய புள்ளிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட இரண்டு ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. “உனக்கு சினிமாவில் நடிக்கப் பெரிய வாய்ப்பு வாங்கித் தருகிறோம்” என அந்தப் பெண்ணை நம்பவைத்து, தங்கள் மாய வலையில் வீழ்த்தியுள்ளனர் அந்த மர்ம நபர்கள்.
இரண்டு நாட்கள் கொடூரம்
சினிமா வாய்ப்பு என்ற வார்த்தையை முழுமையாக நம்பிய அந்தப் பெண்ணை, அந்த இரு நபர்களும் செகந்திராபாத்தில் உள்ள தங்களது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்றதும் தங்களது சுயரூபத்தைக் காட்டிய அவர்கள், அந்தப் பெண்ணை இரண்டு நாட்களாகத் தங்களது அறையிலேயே அடைத்து வைத்து, தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கொடூரத்தின் உச்சமாக, மே 16-ஆம் தேதியன்று அந்தப் பெண்ணை மிரட்டி, ஒரு ‘ராபிடோ’ (Rapido) பைக்கைப் புக் செய்து, மீண்டும் அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்துள்ளனர் அந்த மிருகங்கள்.
வெளிச்சத்திற்கு வந்த உண்மை
வீட்டிற்குத் திரும்பிய பெண்ணின் உடல்நிலை மோசமாக இருந்ததைக் கண்டும், அவரது உடலில் இருந்த காயங்களைக் கண்டும் அதிர்ச்சியடைந்த அவரது தோழி, என்ன நடந்தது என்று தீவிரமாக விசாரித்துள்ளார். அப்போதுதான், சினிமா ஆசை காட்டி நடந்த அந்த இரண்டு நாள் கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக சிகிச்சைக்காகக் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஜூப்ளி ஹில்ஸ் காவல்துறையினர் இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, ‘ராபிடோ’ புக் செய்த மொபைல் எண் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்துக் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சினிமா ஆசையைக் காட்டி பெண்களை வேட்டையாடியகொடூரம், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
