ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்புப் பணியாளராக உள்ள ஒருவர் 78 கோடி ரூபாய் லாட்டரி பரிசை வென்றுள்ளார். அப்பணத்தைத் தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட அவர், ‘தார்’ ரக காரை வாங்கவும் திட்டமிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘லக்கி டே’ லாட்டரி குலுக்கலில், சுமார் 78 கோடி ரூபாய் மதிப்பிலான பெரும் பரிசைத் தையப் கான் என்ற பாதுகாப்புப் பணியாளர் வென்றுள்ளார். நீண்ட நாட்களாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த இவர், தற்செயலாக வாங்கிய லாட்டரி சீட்டு மூலம் இந்தப் பெரும் பரிசை வென்றுள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த 26 வயதான இவர், குலுக்கல் நிகழ்ச்சியைப் பார்க்கவே இல்லை என்றும், முடிவுகளைப் பலமுறை சரிபார்த்த பிறகே அதை நம்ப முடிந்ததாகவும், அந்தச் செய்தி தனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்ததாகவும் கூறினார். மின்னஞ்சல் மூலமாகவே அவர் இந்தப் பரிசை வென்ற விவரத்தை அறிந்துகொண்டார்.
“முன்பும் சிறிய பரிசுகளுக்காக இது போன்ற மின்னஞ்சல்கள் எனக்கு வந்திருக்கின்றன, அதனால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை,” என்று தையப் கூறினார். “ஆனால் மின்னஞ்சலைத் திறந்து 30 மில்லியன் திர்ஹம் என்று பார்த்தபோது, என் கைகளும் கால்களும் நடுங்கின. அது ஒரு கனவு போல இருந்தது.” என்றார்.
அந்தச் செய்தியின்படி, லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்காகத் தொடர்ந்து பணம் திரட்டி வந்த ஐந்து நெருங்கிய நண்பர்களுக்கு இடையே இந்தப் பரிசுத் தொகை பகிர்ந்துகொள்ளப்பட்டது. “ஜாக்பாட் பரிசுத் தொகை சமமாகப் பிரிக்கப்படும். அதன்படி ஒவ்வொரு நண்பருக்கும் 6 மில்லியன் திர்ஹம் கிடைக்கும்.
6 மில்லியன் திர்ஹம் என்பது இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாயாகும். “நாங்கள் மொத்தம் ஐந்து பேர் இருக்கிறோம். நாங்கள் பணத்தைச் சேர்த்துத் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தோம். ஒவ்வொரு வாரமும் ஒருவர் மாறி மாறி எண்களைத் தேர்ந்தெடுப்போம்” என்று அவர் கூறினார்.
லாட்டரி வென்ற பிறகு அவர் தனது மாமாவிடம் பேசினார். கான் கூறுகையில், “நான் இங்கு வேலைக்கு வருவதற்கு அவர்தான் முக்கியக் காரணம். நாங்கள் எவ்வளவு பரிசு வென்றோம் என்று அவரிடம் சொன்னபோது, அவர் பேச்சற்றுப் போனார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது,” என்றார்.
வென்ற பணத்தைக் கொண்டு, வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கவும், முதலீட்டில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார். அவர் தனது குடும்பத்திற்காக ஒரு வீடு கட்டவும், சில தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றவும் விரும்புகிறார். அவரது விருப்பப் பட்டியலில் முதன்மையானது ‘மஹிந்திரா தார்’ எஸ்யூவி வாகனம் வாங்குவது. பாதுகாப்புப் பணியாளராகப் பெற்ற ஊதியத்தில் வாங்க முடியாத அந்த வாகனத்தை வாங்குவது அவரது நீண்டகாலக் கனவாக இருந்தது.
“எனது குடும்பத்திற்கு ஒரு நல்ல வீட்டை வாங்குவதே எனது முதல் குறிக்கோளாக இருந்தது. இப்போது, ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும், நல்லதொரு இடத்தில் ஒரு சிறந்த வீட்டை என்னால் கட்ட முடியும். நான் நான்கு ஆண்டுகள் ஊழியராகப் பணியாற்றியுள்ளேன். இப்போது அடுத்த கட்டத்திற்குச் செல்ல விரும்புகிறேன். நான் ஒரு மஹிந்திரா தார் ஜீப், ரோலக்ஸ் கடிகாரத்தை வாங்க நீண்ட நாட்களாக விரும்பிக் கொண்டிருக்கிறேன். மீதமுள்ள பணம் கடன்களை அடைப்பதற்கும், சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு உதவுவதற்கும், தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படும். மீண்டும் பாதுகாப்புப் பணிக்குச் செல்வதற்குப் பதிலாக, ஒரு சிறிய தொழிலைத் தொடங்குவது குறித்தும் அவர் பரிசீலித்து வருகிறேன்” என்கிறார்.
இதுபோன்ற லாட்டரி வெற்றிகள் அரிதானவை என்றாலும், சிறந்த வாழ்க்கையைத் தேடி ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பல புலம்பெயர்ந்தோரின் மனதை இந்த பாதுகாப்புப் பணியாளரின் கதை தொட்டுள்ளது. ஒரே ஒரு லாட்டரி சீட்டு ஒருவரின் வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றி அமைத்துவிடும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.
