Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி. சத்யபாமா சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து அவையை வழிநடத்திய சம்பவம் கவனம் பெற்றுள்ளது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இருவரும் அவையில் இல்லாத நேரத்தில், மாற்றுத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையை சத்யபாமா பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1922ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாண ஆளுநர் லார்ட் வில்லிங்டன் மற்றும் அவரது மனைவி லேடி வில்லிங்டன் ஆகியோரால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சபாநாயகர் நாற்காலி பேரவைக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த இருக்கையில் ஒரு பெண் அமர வேண்டும் என்பது நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த நிலையில், தற்போது சத்யபாமா அந்த இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியுள்ளார்.

சத்யபாமா அவையை வழிநடத்திய விதம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு அவையில் பேசும்போது, “வில்லிங்டன் பிரபு மற்றும் லேடி வில்லிங்டன் வழங்கிய இந்த ஆசனத்தில் ஒரு பெண்மணி சபாநாயகராக அமர வேண்டும் என்பது நீண்ட கால எதிர்பார்ப்பு. இன்று நீங்கள் மாற்றுத் தலைவராக அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்.

இதையும் படியுங்க  திடீர் தைலாபுர கிளைமாக்ஸ்..! பின்னணியில் தவெக வியூக வி.ஐ.பி.? அதிர்ச்சியில் அறிவாலயம்..!

சட்டப்பேரவை விதிகளின்படி, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இருவரும் அவையில் இல்லாத அசாதாரண சூழ்நிலையில், அவையைத் தொடர்ந்து நடத்த “மாற்றுத் தலைவர்கள் குழு” எனப்படும் Panel of Chairpersons நியமிக்கப்படுவது வழக்கம்.

இந்தக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களுக்கு, சபாநாயகர் இல்லாத நேரத்தில் அவையை வழிநடத்தவும், உறுப்பினர்களின் விவாதங்களை ஒழுங்குபடுத்தவும் சபாநாயகருக்கு இணையான அதிகாரம் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் சத்யபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியுள்ளார்.

சத்யபாமா அவையை நடத்திக்கொண்டிருந்தபோது, விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் ஒருவர் அவரைத் தவறுதலாக “மாண்புமிகு துணை பேரவைத் தலைவர் அவர்களே” எனக் குறிப்பிட்டுப் பேசினார். உடனே சுதாரித்துக்கொண்ட மற்ற உறுப்பினர்கள், இது துணை சபாநாயகர் பதவி அல்ல என்றும், மாற்றுத் தலைவர் பதவி என்றும் சுட்டிக்காட்டினர். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தவெக சட்டமன்ற உறுப்பினரான சத்யபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கம்பீரமாக அவையை நடத்திய விதம், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சத்யபாமாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரும் அவரது செயல்பாட்டைப் பாராட்டியுள்ளார்.

இதையும் படியுங்க  விஜய்யை ஆட்சியில் அமர்த்த மாஸ்டர் பிளான் - அதிமுகவை உடைக்க அமித்ஷா ஸ்கெட்ச்..!

சத்யபாமா தற்போதைய திருப்பூர் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. ஆவார். இதற்கு முன்பு அதிமுக சார்பில் போட்டியிட்டு, 2014 முதல் 2019 வரை திருப்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். பின்னர் 2025ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சத்யபாமாவை “மாற்றுத் தலைவர்கள் குழு” உறுப்பினராக ஜூன் 2026ஆம் ஆண்டு நியமித்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் அவையை வழிநடத்தும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்த நிகழ்வில் மற்றொரு சுவாரசியமான அம்சமும் இடம்பெற்றிருந்தது. சத்யபாமா சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து அவையை வழிநடத்திய அதே நேரத்தில், அவருக்கு நேர் எதிரே நடுவரிசை இருக்கையில் மற்றொரு பெண் அமர்ந்திருந்தார். அவர் ஆர். சாந்தி.

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல் முறையாகப் பெண் செயலாளராக ஆர். சாந்தி ஜூன் 2026ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் சபாநாயகர் இருக்கையில் ஒரு பெண்ணும், அவையின் நிர்வாகத்தை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பில் மற்றொரு பெண்ணும் இருந்தது, தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  அதிமுகவை அபகரித்த நினைத்தால்.. எங்க தொண்டர்கள் தற்கொலை படைகளாக மாறுவார்கள்.. விஜய்க்கு ஆர்.பி. உதயகுமார் பகீர் எச்சரிக்கை...!

அவையின் வழக்கமான கூட்ட முடிவில் மீண்டும் சபாநாயகர் இருக்கைக்கு வந்த பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், சத்யபாமா அவையை வழிநடத்திய விதத்தைப் பாராட்டினார். “மாற்றுத் பேரவைத் தலைவர் சத்யபாமா இன்று சட்டப்பேரவையை மிகச் சிறப்பாகவும், கண்ணியமாகவும் வழிநடத்தியதை நான் கவனித்தேன். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று அவையிலேயே பாராட்டுத் தெரிவித்தார்.

தவெக, திமுக, அதிமுக என பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையே அரசியல் மோதல்கள் இருந்தாலும், சத்யபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய அந்தச் சில மணி நேரங்களில் எந்தவிதமான கூச்சலோ, பெரிய விவாத மோதல்களோ இன்றி அவை மிகவும் நாகரிகமான முறையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் சத்யபாமாவின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு, சபை மரபைக் கடைப்பிடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய இந்த நிகழ்வு, தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

56 minutes ago at 56 minutes ago