தமிழக அரசியல் களம் இன்று ஒரு த்ரில்லர் திரைப்படத்தை விட விறுவிறுப்பாக மாறியுள்ளது. 2026 தேர்தல் முடிவுகள் ஒரு ‘தொங்கு சட்டசபை’யை உருவாக்கியுள்ள நிலையில், டெல்லியின் சாணக்கியர் அமித்ஷா, தமிழக அரசியலில் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 109 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் விஜய்யின் தவெகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க, அதிமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக தலைமை இறங்கியுள்ளதாக வரும் தகவல்கள் அரசியலில் அனலைக் கிளப்பியுள்ளது.
அமித்ஷா வியூகம்?
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே கொளத்தூரில் தோல்வியடைந்த நிலையில், எப்படியாவது தவெக ஆட்சி அமைப்பதைத் தடுத்துவிட வேண்டும் என திமுக காய் நகர்த்தி வருகிறது. அதற்கு முட்டுக்கட்டை போட அமித்ஷா களமிறங்கியுள்ளார். விஜய்க்குத் தேவையான அந்த 9 மேஜிக் இடங்களை, அதிமுகவிலிருந்து பிரித்து எடுத்து தவெக-விற்கு ஆதரவளிக்கச் செய்யும் ரகசிய வேலைகள் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சிதறுகிறதா இரட்டை இலை?
தற்போது 54 இடங்களுடன் தத்தளிக்கும் அதிமுகவில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் தொடர் தோல்விகளைச் சந்தித்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பட்டாளம் ஒன்று தயாராக உள்ளது. “விஜய்க்கு ஆதரவளித்து அமைச்சர் பதவிகளைப் பெறலாம்” என்ற ஆசை பலருக்குக் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. டெல்லியின் ஆசி இருந்தால் எடப்பாடியின் பிடியிலிருந்து தப்பித்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தற்காத்துக் கொள்ள 2/3 பங்கு உறுப்பினர்களைத் திரட்டுவது அமித்ஷாவிற்கு ஒன்றும் அசாத்தியமான காரியம் அல்ல.

விஜய் – பாஜக
அமித்ஷா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிமுகவை உடைத்து, அதன் ஒரு பகுதியை விஜய்யுடன் இணைய வைத்தால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரும். அமித்ஷாவின் இந்த கணக்கு வெல்லுமா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
