தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 40 நாட்களைக் கடந்துள்ள சூழலில், கடந்த கால திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்கள் பொதுவெளியில் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. “சாலையே போடாமல் ரூ.110 கோடியைச் சுருட்டிய ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்காமல், இரவோடு இரவாக போலீஸாரைக் குவித்து ஊழல் ஆதாரங்களை அழிக்க முயன்றது ஏன்?” என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை நோக்கிக் கேள்விகள் பாய்ந்துள்ளன. மேலும், ஊழல் புகாரில் சிக்கிய அதிமுகவினரை திமுகவில் இணைத்து வழக்குகளை ரத்து செய்யும் அரசியலையும் சாடியுள்ள அறப்போர் இயக்கம்,
இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், ”அறப்போர் 2022ம் ஆண்டு கொடுத்த புகாரை விசாரிக்காமல் தலையணைக்கு அடியில் வைத்து நன்றாக உறங்கி விட்டு இப்போ ஆட்சி மாற்றம் நடந்த பிறகு FIR போட்டால் அது பழி வாங்கும் நடவடிக்கையா மிஸ்டர் வேலு? அப்போ ஊழல் புகாரை விசாரிக்காமல் ஒளித்து வைத்து ஊழல்வாதிகளை பாதுகாத்து நீங்கள் செய்த வேலைக்கு என்ன பெயர் மிஸ்டர் வேலு?
சாலையே போடவில்லை. ஆனால் சாலையை அளந்து கணக்கெடுத்து அதற்குரிய பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் யாருக்கு கொடுத்தார்கள்? திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லப்படுகிற சங்கர் ஆனந்த் என்ற ஒப்பந்ததாரருக்கு கொடுத்திருக்கிறார்கள். அவரும் அதை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார். அந்த வருடத்தில் 110 கோடிக்கு சாலை போட்டிருக்கிறாராம் இந்த சங்கர் ஆனந்த். அப்போ இன்னும் எத்தனை கோடிகளை அவர் ஏப்பம் விட்டாரோ?
பணத்தை கொடுத்த அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த நீங்கள் அதை வாங்கிய சங்கர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மிஸ்டர் வேலு? முதல் தகவல் அறிக்கை கூட போடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக போடாத சாலையை போட, இரவோடு இரவாக காவல்துறையை குவித்து சர்க்கஸ் காட்டி இருக்கிறீர்கள். அதாவது ஊழல் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.
நடந்த இத்தனை விஷயங்களும் உங்களுக்கு தெரியாமல் நடந்ததா? உங்கள் துறையில் நடந்த எந்த விஷயங்களும் உங்களுக்கு தெரியாத அளவிற்கு கையாலாகாத அமைச்சராகவா இருந்தீர்கள் மிஸ்டர் வேலு?
இப்படிப்பட்ட கையாலாகாத அமைச்சரை நம்பியா மாநில நெடுஞ்சாலைத்துறையை கொடுத்தீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?
ஊழலில் சம்பந்தப்பட்டது ஒரு அதிமுக அமைச்சராக இருந்திருந்தால் ஒரு முதல் தகவல் அறிக்கை போட்டு டீல் பேசி வைத்திலிங்கம் போல திமுகவில் இணைத்திருக்கலாம். இணைத்த வேகத்தில் அந்த முதல் தகவல் அறிக்கையை கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரத்து செய்திருக்கலாம். அப்படித்தானே மிஸ்டர் ஸ்டாலின்?
இந்த புகாரில் முதல் தகவல் அறிக்கை வெறும் ஆரம்ப புள்ளி தான். விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவதே சாதனை. அந்த சாதனையை விஜய் அரசு செய்யுமா?” என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
