‘நூறு சாமி’ திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் சினிமாவில் இருந்து விலகி, ஒரு கிராமத்தில் நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களின் பரபரப்பான மற்றும் செயற்கையான வாழ்க்கை முறையை விட, எளிமையான கிராமத்து வாழ்க்கையையே தான் அதிகம் விரும்புவதாக விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
இதற்காக பொள்ளாச்சி அல்லது அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலம் வாங்கி, அங்கேயே நிரந்தரமாக வசிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது அதற்கான பொருத்தமான இடத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரபல தொழிலதிபரும், சோஹோ நிறுவனத்தின் தலைவருமான ஸ்ரீதர் வேம்புவை தனது முன்மாதிரியாகக் குறிப்பிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. கோடிக்கணக்கான மதிப்புள்ள தனது நிறுவனத்தை ஆன்லைன் மூலமாக நிர்வகித்துக்கொண்டே, தென்காசி மாவட்ட கிராமப்புற சூழலில் மிகவும் எளிமையாக வாழ்ந்து வரும் ஸ்ரீதர் வேம்புவின் வாழ்க்கை முறை தன்னை ஈர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“தொழில் நிமித்தமாக மட்டுமே நான் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். ஸ்ரீதர் வேம்பு சார் போல நானும் விரைவில் கிராமத்திற்குச் சென்று நிம்மதியாக வாழப் போகிறேன்” என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ஒரு எளிய கிராமத்து விவசாயியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்றது. அங்குள்ள மக்களின் எளிமையான வாழ்க்கை முறை, அன்பான உபசரிப்பு மற்றும் இயற்கைச் சூழல் அவரை பெரிதும் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, சுமார் 45 நாட்கள் கிராமப்புறங்களில் கழித்த அனுபவம், நகர வாழ்க்கையிலிருந்து விலகி இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், விஜய் ஆண்டனி சினிமாவை முற்றிலும் விட்டு விலகுகிறார் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டாலும், அவர் திரைத்துறையை முழுமையாக விட்டு விலகப் போவதில்லை எனத் தெரிகிறது.
நடிப்பை குறைத்துக்கொண்டு அல்லது அதிலிருந்து ஓய்வு பெற்றாலும், தனது பண்ணை வீட்டில் இருந்தபடியே இசையமைத்தல் மற்றும் திரைப்படத் தயாரிப்பு போன்ற பின்னணிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
“வாழ்க்கையை ஓடிக்கொண்டே கழிக்கக் கூடாது; நிம்மதியாக வாழ வேண்டும்” என்ற அவரது வாழ்க்கை நோக்கமே இந்த முக்கியமான முடிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
