108 திவ்ய தேசங்களில் ஒன்றான அத்திவரதர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நாளை காலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் N.ஆனந்தன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்கின்றனர்.
தேரோட்டத்தை ஒட்டி பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவதை ஒட்டி காஞ்சிபுரம் மாநகரில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகரில் ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில்வே நிலையம், ஆகிய ஐந்து இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வாகனங்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
