2024-ஆம் ஆண்டில், பாகிஸ்தான் தனது ‘எக்காலத்திற்குமான நட்பு நாடான’ சீனாவிடம், கடற்படை சார்ந்த அணு ஆயுத ‘இரண்டாவது தாக்குதல்’ திறனை கேட்டு வந்தது. ஆனாலும், பாகிஸ்தானுக்கு ஏற்கனவே ஆயுதங்களையும் நிதி உதவியையும் வழங்கி வந்த போதும், அணு ஆயுதத் தடுப்பு அமைப்பின் மிக முக்கியமான, நுட்பமானதாக கருதப்படும் ஒன்றை பாகிஸ்தானுக்கு வழங்க சீனா மறுத்துவிட்டதாக, டிராப் சைட் நியூஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கையை சீனா ‘நியாயமற்றது’ என்று கூறியதாகவும், இத்தகைய திறனை வழங்குவது தென் ஆசியாவில் அணு ஆயுதப் பெருக்கத்தில் சீனா நேரடியாகத் தலையிடுவதற்குச் சமமாகிவிடும் என்றும் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆழமான நீர்ப்பகுதியைக் கொண்ட குவாடர் துறைமுகத்தை, சீனாவின் நிரந்தர இராணுவத் தளமாக மாற்ற சீனாவுக்கு அனுமதி அளிப்பதற்கு முன், பாகிஸ்தான் பல நிபந்தனைகளை விதித்ததாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன. இந்த முன்மொழிவை பாகிஸ்தான் கடந்த படத்தாண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து வந்தது.
அறிக்கையின்படி, இந்த நடவடிக்கையின் காரணமாக அமெரிக்காவிடம் இருந்து ஏற்படக்கூடிய அரசியல், பொருளாதார, தூதரக ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, பாகிஸ்தான் சீனாவிடம் பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கோரியது. இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தானின் பாதுகாப்பு, உளவுத்துறைத் திறன்களைப் பராமரிக்க உதவும் வகையில், இராணுவ நவீனமயமாக்கல் உதவிகளை வழங்குமாறும் பாகிஸ்தான் சீனாவிடம் கேட்டுக்கொண்டது.
கடல் சார்ந்த அணுசக்தி இரண்டாம் தாக்குதல் திறன் என்பது, ஒரு நாடு பேரழிவை ஏற்படுத்தும் முதல் தாக்குதலுக்கு உள்ளான பிறகும், பதிலடி கொடுக்கும் அணுசக்தித் தாக்குதலைத் தொடுக்கும் திறன். இது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களை சார்ந்துள்ளது. இவை நீருக்கடியில் மறைந்திருப்பதால், இவற்றைக் கண்டறிவதும் அழிப்பதும் மிகவும் கடினம்.
இந்தத் திறன் ஒரு சக்திவாய்ந்த தடுப்பாகச் செயல்படுகிறது.இதன் மூலம் எந்தவொரு எதிரியும் திடீர் தாக்குதல் மூலம் ஒரு நாட்டின் அணு ஆயுதக் கிடங்கை அழிக்க முடியாது என்பது உறுதி செய்யப்படுகிறது. இதைத் தக்கவைத்துக் கொள்ள, நாடுகள் மேம்பட்ட மறைவுத்தன்மை, பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகளின் ஆதரவுடன், குறைந்தபட்சம் ஒரு எஸ்.எஸ்.பி,எநையாவது எல்லா நேரங்களிலும் ரோந்துப் பணியில் வைத்திருக்க வேண்டும்.
அணுசக்தி மூலம் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் ஆறு நாடுகள் மட்டுமே, கடலில் இருந்து அணுசக்தி மூலம் இரண்டாவது தாக்குதல் நடத்தும் திறனைக் கொண்டுள்ளன. அமெரிக்கா, ஓஹியோ-வகை கப்பல்களைக் கொண்ட ஒரு பெரிய, மிகவும் அதிநவீன கடற்படையைப் பராமரிக்கிறது. அதே வேளையில், ரஷ்யா ஆர்க்டிக், பசிபிக் பகுதிகளில் ரோந்துப் பணிக்காக தனது நவீன போரி-வகை நீர்மூழ்கிக் கப்பல்களைச் சார்ந்துள்ளது.
சீனா, நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட டைப் 094 நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தி தனது தடுப்புச் சக்தியைப் பலப்படுத்துகிறது. ஐரோப்பாவில், பிரான்சும் ஐக்கிய நாடுகளும் தங்களின் முழு அணுசக்தி உத்திகளையும் கடலை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு நாடும் குறைந்தபட்சம் ஒரு நீர்மூழ்கிக் கப்பலாவது எல்லா நேரங்களிலும் நிரந்தரமாக ரோந்துப் பணியில் இருப்பதை உறுதி செய்கிறது.
இந்தியா தனது உள்நாட்டு அரிஹந்த்-வகைத் திட்டத்தின் மூலம் இந்தத் திறனை அடைந்தது. இது தொடர்ச்சியான தடுப்புச் சுழற்சியை உறுதி செய்வதற்காகத் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்தப் பெரும் வல்லரசுகளுக்கு அப்பால், இஸ்ரேல் மாற்றியமைக்கப்பட்ட, வழக்கமான டால்பின்-வகை நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தி ஒரு பகுதியில் இரண்டாம் தாக்குதல் திறனைப் பராமரித்து வருவதாகப் பரவலாக நம்பப்படுகிறது.
