https://republictn.com/

“அனாதை சிறுமிகளுக்கு மாப்பிள்ளைகள் தேவை, யாராவது இருந்தால் சொல்லுங்கள்…” என்று சமூக ஊடகங்களில் பரவிய ஒரு விளம்பரத்தை நம்பி வந்த 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், லட்சக்கணக்கில் பணத்தை இழந்து ஏமாந்து நின்ற சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர், போபால் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 42 இளைஞர்களுக்கு, மே 25 அன்று தேவாஸின் மாதாஜி டெக்ரி பகுதியில் கூட்டுத் திருமணம் நடப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்காக, முகேஷ்தாஸ் பைராகி என்ற புரோக்கர் இளைஞர்களிடம் தலா ₹15,000 முதல் ₹25,000 வரை வசூலித்திருந்தார். இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பெண்களின் புகைப்படங்களையும் அனுப்பியதால், மாப்பிள்ளைகள் தங்கள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே பளபளக்கும் ஆடைகளுடன் தேவாஸ் மைதானத்திற்கு வந்து இறங்கினர்.

ஆனால், நள்ளிரவு ஆகியும் ஒரு மணப்பெண் கூட வரவில்லை. விடிய விடியக் காத்திருந்த மாப்பிள்ளைகளும் அவர்களது குடும்பத்தினரும் ஆத்திரமடைந்து, புரோக்கர் முகேஷ்தாஸையும் அவரது மனைவியையும் அங்கேயே சிறைபிடித்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முகேஷ்தாஸை விசாரித்தபோதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் ‘ட்விஸ்ட்’ வெளிவந்தது. இந்த ஒட்டுமொத்த நாடகத்தின் பின்னணியில் மாஸ்டர் பிளானாக இருந்தது முகேஷ்தாஸின் சொந்தத் தம்பியான தினேஷ்தாஸ் பைராகி.

“அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும், வரன் இருந்தால் பிடி” என்று அண்ணன் முகேஷிடம் தம்பி தினேஷ்தான் ஆசை வார்த்தை கூறியுள்ளார். தம்பியை கண்மூடித்தனமாக நம்பிய அண்ணன் முகேஷ், 40-க்கும் மேற்பட்ட மாப்பிள்ளைகளைத் திரட்டி, அவர்களிடம் வாங்கிய லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை அப்படியே தம்பியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

பணம் கைக்கு வந்தவுடன், தம்பி தினேஷ்தாஸ் தனது கைபேசியை அணைத்துவிட்டு பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். “என் சொந்த தம்பியே என்னை ஏமாற்றி, 40 மாப்பிள்ளைகளிடம் என்னை மாட்டிவிட்டு ஓடிவிட்டான்” என்று முகேஷ்தாஸ் போலீஸாரிடம் கதறியுள்ளார்.

தற்போது பேங்க் நோட் பிரஸ் போலீஸ் அதிகாரி பிரீத்தி கட்டாரே இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள தம்பியைப் பிடித்தால் மட்டுமே இதன் முழுப் பின்னணியும் வெளிவரும். புது மாப்பிள்ளையாக ஆசைப்பட்டு வந்த 42 இளைஞர்கள், பணத்தை இழந்துவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 hours ago at 10 hours ago