https://republictn.com/

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

இதையடுத்து, முதல்வராக விஜய் பதவியேற்று தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்த ஒரு மாத காலகட்டத்திற்குள் தமிழக வெற்றி கழக அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கடந்த மே 19ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, “தூத்துக்குடியை முழுமையான துறைமுக நகரமாக மாற்றுவதே முதல்வர் விஜய் மற்றும் எங்களது விருப்பம்” என்று தெரிவித்தார். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தூத்துக்குடி ஏற்கனவே ஒரு துறைமுக நகரம்தான்” என்று கூறி அமைச்சரின் கருத்தை விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து, கச்சத்தீவு மீட்பு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஸ்ரீநாத் “நோ கமெண்ட்ஸ்” என்று பதிலளித்ததும் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “நோ கமெண்ட்ஸ் கூறுவதற்காகவா அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?” என்ற கேள்வியுடன் சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றபோது, அமைச்சர் ஸ்ரீநாத் தவறுதலாக வேறு தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் சென்று நன்றி தெரிவித்ததாகக் கூறப்படும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனாலும் அவர் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இதன் மூலம் அமைச்சர் ஸ்ரீநாத்தின் சில கருத்துக்களும் செயல்பாடுகளும் தொடர்ந்து பொதுவெளியில் விவாதங்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.

இவரைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று அறநிலையத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ரமேஷும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

அவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் அறநிலையத் துறை அவருக்கு ஒதுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “மதச்சார்பின்மையே தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை கொள்கை. சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றவன் நான்” என்று விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில், மற்றொரு சம்பவமும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கோவில் வளாகத்தில் செயல்பட்டு வந்த பிரசாதக் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரமேஷ், அங்கு விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் அதற்கான ஆதாரங்கள் குறித்து எழுப்பிய கேள்விகள் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறின.

இவர்களைத் தொடர்ந்து, தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரும் தொடர்ச்சியான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிய நிலையில், அதனைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் நிர்மல் குமார் விமர்சிக்கப்பட்டார்.

ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழக அமைச்சர்களின் சில கருத்துகள், நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கி வருகின்றன.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 minutes ago at 33 minutes ago