கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பனவூர் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஹர்ஷித் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குழந்தையின் தாய் அகிலா (24) மற்றும் அவரது ஆண் நண்பர் அஷ்கர் (31) ஆகிய இருவரையும் நெடுமங்காடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 29ஆம் தேதி, குழந்தை ஹர்ஷித் உணவு சாப்பிடும்போது தொண்டையில் உணவு சிக்கி மூச்சுத்திணறி மயங்கிவிட்டதாகக் கூறி, அஷ்கர் முதலில் பனவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் எஸ்.ஏ.டி (SAT) அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அகிலாவின் தாய் (பாட்டி ரீனா) காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. குழந்தையின் உடலில் 51-க்கும் மேற்பட்ட உட்புற மற்றும் வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்தது.
தலையில் பலத்த அடிபட்டு உட்புற ரத்தக்கசிவு (கபால ரத்தக்கசிவு) ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் என மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலும், விலா எலும்புகள் மற்றும் கைகளில் எலும்பு முறிவுகளும் இருந்தன.
குழந்தையின் கைகள், கால்கள் மற்றும் முதுகுப் பகுதிகளில் சிகரெட்டால் சுடப்பட்ட தீக்காயங்களின் தழும்புகளும் காணப்பட்டன. குழந்தையின் பிறப்புறுப்புப் பகுதியிலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தது உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்தது.
குழந்தையின் தாய் அகிலாவின் முதல் கணவர் அகில், குழந்தை கர்ப்பத்தில் இருந்தபோதே தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பின்னர், கடந்த சில மாதங்களாக அகிலா, அஷ்கருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அஷ்கர் குழந்தையை தொடர்ந்து சித்திரவதை செய்ததை அறிந்தும் அகிலா தடுக்கவில்லை என்றும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு குழந்தையின் இரு கைகளும் உடைந்த நிலையில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. அதுகுறித்து கேட்டபோது, சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறி அகிலா சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு நாடகமாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இறந்த சமயத்தில், அகிலா தமிழ்நாட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தை இறந்த பிறகு, வீட்டின் உட்புறத்தை கழுவி ரத்தக் கறைகளை அழிக்கவும், குழந்தையின் ரத்தம் படிந்த ஆடைகள் மற்றும் மருத்துவ ஆவணங்களை வீட்டின் பின்புறம் எரித்து சாம்பலாக்கவும் குற்றவாளிகள் முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முதன்மை குற்றவாளியான அஷ்கருக்கு ஏற்கனவே அமீனா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. வரதட்சணைக் கொடுமை தொடர்பாக அஷ்கர் தனது முதல் மனைவியையும் இதேபோன்று தாக்கி, தலையை சுவரில் முட்டி சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் சுமார் ஓராண்டாக கோமா நிலையில் இருந்து, தற்போது படுக்கையிலேயே முடங்கியுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நெடுமங்காடு காவல்துறையினர் அஷ்கரை விசாரணைக்காகவும், சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரிக்கவும் அழைத்துச் சென்றபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து போலீஸ் பாதுகாப்பையும் மீறி அஷ்கரை தாக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது நீதிமன்றம் இருவரையும் நீதிமன்றக் காவலில் (Judicial Custody) வைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் ஆதாரங்களை முழுமையாக திரட்டி வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
