https://republictn.com/

இளையராஜா – பாரதிராஜா கூட்டணி: தமிழ் சினிமாவின் பொற்காலத்தை உருவாக்கிய 50 ஆண்டுகால நட்பு.

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோரின் கூட்டணி ஒரு பொற்காலமாகப் போற்றப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இவர்களின் நட்பு, சினிமாவைத் தாண்டி பல சுவாரசியமான மற்றும் பலருக்கும் தெரியாத சம்பவங்களைக் கொண்டுள்ளது.

அண்மையில் இயக்குநர் பாரதிராஜா குறித்து மீண்டும் பேசப்பட்டு வரும் நிலையில், இவர்களின் திரைப்பயணத்தையும், பின்னர் ஏற்பட்ட பிரிவின் பின்னணியையும் பற்றிய சில முக்கிய தகவல்கள் கவனம் பெறுகின்றன.

பாரதிராஜா ஆரம்ப காலத்தில் சுகாதாரத் துறையில் (Health Inspector) பணியாற்றியபடியே நாடகங்களை நடத்தி வந்தார். அந்த நாடகங்களுக்கு, சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இளையராஜா — அப்போது ராசையா என அறியப்பட்டவர் — இசையமைத்தார்.

பின்னர் இருவரும் சினிமாவில் வாய்ப்புகளைத் தேடி சென்னை வந்த காலகட்டத்தில், பாரதிராஜா தனக்குக் கிடைத்த சம்பளத்தை இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உதவியதாக கூறப்படுகிறது.

பாரதிராஜாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘முதல் மரியாதை’ திரைப்படத்திற்கு இசையமைப்பதில் தொடக்கத்தில் இளையராஜாவுக்கு பெரிதாக விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், பாரதிராஜாவுக்காக தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, அந்தப் படத்திற்கு காலத்தால் அழியாத இசையைக் கொடுத்தார்.

குறிப்பாக, அந்தப் படத்தின் இறுதிக்காட்சிக்காக அமைக்கப்பட்ட பின்னணி இசையைக் கேட்டபோது, பாரதிராஜாவே கண்கலங்கியதாக திரையுலகில் பலர் நினைவுகூர்ந்துள்ளனர்.

இவர்களின் கூட்டணியில் வெளியான கடைசித் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி தென்றல்’ ஆகும். இந்தப் படத்திற்குப் பிறகு இருவரும் பிரிந்தது, தமிழ் திரையுலகினருக்கும், பாடகர் மனோ உள்ளிட்ட அவர்களுடன் நெருக்கமாகப் பழகிய கலைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கருத்து வேறுபாடுகள் காரணமாக சுமார் எட்டு ஆண்டுகள் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், “அவனை நினைக்காமல் நான் தூங்கியதே இல்லை” என்று பாரதிராஜா ஒரு பேட்டியில் உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டிருந்தார்.

இவர்களின் பிரிவு குறித்து பேசிய இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், “இருவரின் பிரிவுக்குப் பெரிய காரணங்கள் எதுவும் இல்லை; அது ஒரு சாதாரண குடும்பச் சண்டையைப் போன்றதுதான்” என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.

காலப்போக்கில் இருவரும் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை மறந்து, மீண்டும் தங்களின் ஆழமான நட்பை புதுப்பித்துக் கொண்டனர். தமிழ் சினிமாவின் வரலாற்றில், இளையராஜா–பாரதிராஜா நட்பும், அவர்களின் கலைப் பயணமும் என்றும் மறக்க முடியாத ஒரு அத்தியாயமாகத் திகழ்கிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 hours ago at 7 hours ago