Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, “மாணவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்தக் கருத்துக்கு அமுதனின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், மிகுந்த மனவேதனையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான அமுதன், கோவையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

போதைப்பொருள் விற்பனை குறித்து ரகசிய தகவல்

கல்லூரியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, கல்லூரி நிர்வாகத்தின் டீன் மற்றும் துறைத் தலைவர் கேட்டுக்கொண்டதன் பேரில் அமுதன் சில ரகசிய தகவல்களைத் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

Republic Tamil

கல்லூரியில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்களை அமுதன் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்ததாகவும், அந்தத் தகவலை நிர்வாகமே சம்பந்தப்பட்ட நபர்களிடம் தெரிவித்ததாகவும் அவரது தந்தை கென்னடி குற்றம்சாட்டியுள்ளார்.

அமுதன் அளித்த தகவல் கும்பலுக்குத் தெரியவந்ததையடுத்து, அவரது போதைப்பொருள் விற்பனைத் தொழில் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் அவரைத் திட்டமிட்டு தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

20 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக குற்றச்சாட்டு

சுமார் 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல், இரும்புக் கம்பிகள், கத்திகளின் பின்பகுதி மற்றும் தென்னை மட்டை உள்ளிட்ட பொருட்களால் அமுதனை சரமாரியாகத் தாக்கியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “என் மகனை சுற்றி சுமார் 15 பேர் நின்று இரும்புக் கம்பி, கத்தியின் பின்பகுதி, தென்னை மட்டை உள்ளிட்டவற்றால் உடல் முழுவதும் தாக்கியுள்ளனர். ‘நீ சாக வேண்டும்’ என்று கூறிக்கொண்டே அடித்துள்ளனர். தாக்குதலில் அமுதன் மயக்கமடைந்துள்ளார்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "ஐடி கார்டுல சாதியா? சான்ஸே இல்ல!" நெட்டிசன்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த மாஸ் ரிப்ளை!

பின்னர் அமுதனை வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்ததாகவும் அவரது தந்தை கூறியுள்ளார்.

“கல்லூரி நிர்வாகத்துக்குத் தெரியாமல் இந்தத் தகவல் எப்படி கும்பலுக்குத் தெரியும்?”

அமுதனின் தந்தை கென்னடி மேலும் கூறுகையில், “கல்லூரி நிர்வாகத்திடம் ரகசியமாகத் தகவல் தெரிவிக்குமாறு கூறியதன் அடிப்படையில்தான் என் மகன் தகவலைச் சொல்லியுள்ளார். அந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்படும் என்று நிர்வாகம் கூறியிருந்த நிலையில், அது தொடர்புடைய நபர்களுக்கு எப்படித் தெரிந்தது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தனது மகன் தெரிவித்த தகவல் கும்பலுக்குத் தெரியவந்ததற்கு கல்லூரி நிர்வாகமே காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் எழுந்த கேள்வி

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அமுதன் கொலைச் சம்பவம் “மாணவர்களுக்குள் இருந்த கோஷ்டி மோதல்” எனக் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

Republic Tamil

அமைச்சரின் இந்தக் கருத்து அமுதனின் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“ஒருவரை 20 பேர் சேர்ந்து அடித்தது எப்படி கோஷ்டி மோதலாகும்?”

அமுதனின் தாயார் சுமதி இதுகுறித்து வேதனையுடன் கூறுகையில், “என் மகனை ஒருவரைச் சுற்றி 20 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது எப்படி இரண்டு கோஷ்டிகளுக்கு இடையிலான சண்டையாகும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்க  "வேட்டையை தொடங்கிய தமிழ்நாடு போலீஸ்: நடுங்கும் போதைப்பொருள் நெட்வொர்க்!"

மேலும், “இரண்டு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் தாக்கினால்தான் அதை கோஷ்டி மோதல் என்று கூற முடியும். ஒரு பையனை மட்டும் 20 பேர் சேர்ந்து தாக்கியதை எப்படி கோஷ்டி மோதல் என்று கூற முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமுதனுடன் மற்றொரு மாணவரும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தாக்குதலின்போது அந்த மாணவர் அங்கிருந்து தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அமுதனை மட்டும் 20 பேர் சேர்ந்து தாக்கியதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

“இரண்டு பேரையும் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மற்றொரு மாணவனை மட்டும் ‘ஓடு, உயிர் பிழைத்துக்கொள்’ என்று கூறி அனுப்பிவிட்டு, என் மகனை மட்டும் 20 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். அப்படி இருக்கும்போது இது எப்படி இரண்டு கோஷ்டிகளுக்கு இடையிலான சண்டையாகும்?” என அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

“அமைச்சரின் மகனுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருந்தால்?”

அமைச்சரின் கருத்தால் மனவேதனை அடைந்துள்ள அமுதனின் பெற்றோர், “ஒரு பையனை 20 பேர் சேர்ந்து திட்டமிட்டு ஆயுதங்களால் அடித்துக் கொலை செய்ததை எப்படி கோஷ்டி சண்டை என்று கூற முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Republic Tamil

மேலும், “பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மகனுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டிருந்தால், அவர் இப்படித்தான் கூறியிருப்பாரா?” என்றும் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

போலீசார் உண்மையை மறைப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு

அமுதன் கொலை வழக்கில் போலீசார் உண்மையான காரணத்தை மறைத்து, சம்பவத்தை வேறு கோணத்தில் சித்தரிப்பதாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படியுங்க  "தமிழகத்திற்கு கல்வி ஒளி தந்த மாமனிதர்… வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காமராஜரின் எளிய இல்லம்!"

கல்லூரியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை அமுதன் தெரிவித்ததாலேயே அவர் குறிவைக்கப்பட்டதாகவும், இந்தப் பின்னணியில் நடைபெற்ற தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தங்கள் மகன் கொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன, தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர், கல்லூரி நிர்வாகத்தின் பங்கு என்ன என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் போலீசார் நேர்மையான மற்றும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்பதே அமுதனின் குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கோரிக்கை

கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக எழும் புகார்களை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Republic Tamil

கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், மாணவர்களின் பாதுகாப்புக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கோவை கல்லூரி மாணவர் அமுதனின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில், அனைத்து கோணங்களிலும் முழுமையான விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே தற்போது அமுதனின் குடும்பத்தினரின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 hours ago at 11 hours ago