தனியார் பள்ளி வளாகத்தில், இரும்புக் கம்பி வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றுக்குள் 11-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், ஓராண்டுக்குப் பிறகு சட்டப் போராட்டத்திற்கிடையில் கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை வெளியிட்டு “இயக்குநர் மோகன் ஜி” முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

மாணவனின் ஆசனவாய் பகுதியில் விந்தணுக்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மோகன் ஜி தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், மாணவனின் மரணம் தொடர்பாக மீண்டும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் முகிலன். திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள “தோமினிக் சாவியோ” என்ற மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த முகிலன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி திடீரென காணாமல் போனார் , 2025 ஆகஸ்ட் 1-ம் தேதி காலை, முகிலன் வகுப்பறையில் இல்லாததை ஆசிரியர்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து, தொலைபேசி மூலம் அவரது பெற்றோரைத் தொடர்புகொண்டு, முகிலன் வீட்டிற்கு வந்துள்ளாரா எனக் கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களது மகன் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வருவதாகத் தெரிவித்தவர்கள் , பதற்றமடைந்த பள்ளிக்குச் சென்று முகிலனைத் தேடியதுடன், ஆசிரியர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்
தொடர்ந்து, திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முகிலன் காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து மாணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றில் சடலமாக மீட்பு:

மாணவனைத் தேடும் பணி நடைபெற்ற நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் படித்து வந்த பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றுக்குள் முகிலன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டு மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது மாணவனின் உடலில் தீக்காயங்கள் இருப்பதாகக் கூறி, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தங்களது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அரசியல் கட்சியினர் மற்றும் சில தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும், மாணவன் முகிலனின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்கொலையா? கொலையா?:

மூடப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படும் பள்ளி வளாகக் கிணற்றுக்குள் மாணவன் எப்படி சென்றார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன.
முகிலன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு யாரேனும் அவரைக் கொலை செய்து கிணற்றுக்குள் வீசினார்களா? பள்ளியில் ஆசிரியர்கள் அளித்த அழுத்தம் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணை நடத்திய அன்றைய டவுன் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, மாணவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் முழுமையாகத் தெரியவரும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாணவனின் உடலில் சந்தேகத்திற்குரிய காயங்கள் எதுவும் இல்லை என்றும், நீரில் மூழ்கியதே உயிரிழப்புக்குக் காரணம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது மேலும், மாணவன் தற்கொலை செய்துகொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது
ஆனால், இந்த முடிவில் மாணவனின் பெற்றோர் மற்றும் சில தரப்பினர் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், மாணவன் முகிலனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை சுமார் 11 மாதங்கள் வரை வழங்கப்படாமல் இருந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வந்த நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெறுவதற்காக பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்த பின்னர், தற்போது அந்த அறிக்கை தங்களுக்குக் கிடைத்துள்ளதாக மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
“மாணவனின் ஆசனவாய் பகுதியில் விந்தணுக்கள்” – மோகன் ஜி பரபரப்பு குற்றச்சாட்டு

மாணவன் முகிலனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான ஆகஸ்ட் 1-ம் தேதி, அனுமதி கிடைக்காததால் கடந்த -6 ந்தேதி மாணவனின் வீட்டிற்கு அஞ்சலி செலுத்த இயக்குநர் மோகன் ஜி மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் சென்றனர்.
அப்போது அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அளித்த பேட்டி தங்களிடம் கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கையைச் சுட்டிக்காட்டி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
மாணவன் உயிரிழந்து ஓராண்டு கடந்த நிலையிலும், அவரது மரணம் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை பெற்றோரிடம் முறையாக வழங்கப்படாமல் மறைக்கப்பட்டதாக மோகன் ஜி குற்றம்சாட்டினார்.
மேலும், தற்போது கிடைத்துள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்த மாணவனின் ஆசனவாய் பகுதியில் விந்தணுக்கள் (Semen) இருப்பது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மோகன் ஜி தெரிவித்தார்.
இந்தத் தகவல் மாணவனின் மரணம் தொடர்பாக பல்வேறு புதிய கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.
“பூட்டிய கிணற்றுக்குள் மாணவன் எப்படி விழுந்தார்?”
மாணவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கிணறு இரும்புக் கம்பி வலையால் மூடப்பட்டு, பூட்டப்பட்டிருந்ததாக மோகன் ஜி குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய சூழலில், மாணவன் தானாக அந்தக் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உள்ளதாகத் தாம் கூறும் மருத்துவ விவரங்கள், மாணவன் உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மோகன் ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, இந்த வழக்கை வெறும் தற்கொலை வழக்காகக் கருதி முடித்துவிடாமல், அனைத்து கோணங்களிலும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“வழக்கை ஆரம்பத்திலிருந்தே தற்கொலை என்ற கோணத்தில் விசாரித்தனர்”
ஆரம்பம் முதலே பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளை மறைக்கவும் உள்ளூர் காவல்துறை இந்த வழக்கை தற்கொலை என்ற கோணத்தில் மட்டுமே விசாரித்ததாக மோகன் ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஓராண்டு காலமாக உண்மைகளை மூடி மறைக்கவும், சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை அழிக்கவும் பள்ளி நிர்வாகமும் சில அதிகாரிகளும் முயற்சி செய்திருக்கலாம் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்”
தமிழக காவல்துறையின் தற்போதைய விசாரணை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
பள்ளி நிர்வாகத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பதை முழுமையாகக் கண்டறிய, வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மாணவன் முகிலனின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வரை, சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் தங்களது தரப்பு முன்னெடுக்கும் என்றும் மோகன் ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பள்ளி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு – கைது செய்யவும் கோரிக்கை
மாணவன் முகிலனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனவும் மோகன் ஜி மற்றும் அவருடன் இருந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், பள்ளி பாதிரியார் ஜேசு மாணிக்கத்தை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாணவன் முகிலனின் மரணம் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் அதன் அடிப்படையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், ஏற்கனவே தற்கொலை எனக் கூறப்பட்டு வந்த இந்த வழக்கில் புதிய சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
இதனால், மாணவன் முகிலனின் மரணம் உண்மையில் எவ்வாறு நிகழ்ந்தது? அவர் கிணற்றுக்குள் சென்றது எப்படி? பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள மருத்துவத் தகவல்களின் முழுமையான பின்னணி என்ன? இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்ற கேள்விகளுக்கு விடை காண, மீண்டும் விரிவான விசாரணை நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாணவன் முகிலனின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ள நிலையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை மற்றும் அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பது தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
