கடலூர்–புதுச்சேரி எல்லைப் பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, பின்னர் அவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (31). கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர், சமீபகாலமாக புதுச்சேரி அருகே வெளிநூர் உரியார் பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சசிகுமார் தனது நண்பர் ராஜா என்பவருடன் ரெட்டிச்சாவடி அருகே உள்ள ரங்காரெட்டிப்பாளையம் பகுதியில் காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சுமார் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் வந்ததாக கூறப்படுகிறது.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சசிகுமார் மற்றும் ராஜாவை நோக்கி மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. வெடிகுண்டு வெடித்ததில் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த சசிகுமார் மற்றும் ராஜா, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அந்தக் கும்பல் மறைத்து வைத்திருந்த மற்றொரு நாட்டு வெடிகுண்டையும் வீசியதாகவும், அது வெடிக்காமல் கீழே விழுந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, சசிகுமார் மற்றும் ராஜா இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து ஓடியுள்ளனர். ராஜா ஒரு பக்கமாக தப்பிச் செல்ல, சசிகுமார் அருகில் இருந்த வயல்வெளிப் பகுதி வழியாக ஓடியுள்ளார்.
அப்போது மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் சசிகுமாரை விடாமல் துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அலறியடித்து ஓடியுள்ளனர்.
தொடர்ந்து வயல்வெளிப் பகுதியில் சசிகுமாரை சுற்றிவளைத்த மர்ம கும்பல், அவரை ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அவரது கழுத்து மற்றும் தலைப் பகுதிகளில் கொடூரமாக வெட்டியுள்ளனர்.
பலத்த காயமடைந்த சசிகுமார், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கொலையைச் செய்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், புதுச்சேரி மாநில காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இரு மாநில காவல்துறையினரும் இணைந்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், சசிகுமாரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சசிகுமாருக்கும் சிலருக்கும் இடையே ஏற்கெனவே பிரச்சினை இருந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தொழில் ரீதியான முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சசிகுமாருடன் தொடர்புடைய சில கூட்டாளிகளுக்கும் அவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், அந்த முன்விரோதத்தின் காரணமாக அவரை கொலை செய்யத் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, சசிகுமாருடன் சம்பவத்தின்போது இருந்த அவரது நண்பர் ராஜா தப்பிச் சென்ற நிலையில், அவரை தவளக்குப்பம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ரெட்டிச்சாவடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ராஜாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின்போது அங்கு என்ன நடந்தது, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார், அவர்களுக்கும் சசிகுமாருக்கும் இடையே இருந்த முன்விரோதம் என்ன என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் வீசப்பட்டதாகக் கூறப்படும் நாட்டு வெடிகுண்டுகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மர்ம கும்பலைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர்–புதுச்சேரி எல்லைப் பகுதியில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி கார் ஓட்டுநர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
