திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த வழக்கில், பலே கில்லாடியான பிரபல கொள்ளையனை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். நவீன தொழில்நுட்பம் குற்றவாளியை பிடிக்க உதவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அபிராமி நகரைப் சேர்ந்த சொர்ணம் என்பவர், வெளிநாட்டில் வசித்து வரும் தனது மகளை பார்க்க சென்றிருந்தார். இதனால் அவரது வீடு பூட்டிய நிலையில் இருந்தது.
இதனை கவனித்த மர்ம நபர்கள், சில நாட்களாக அந்த வீட்டை இரவும் பகலும் கண்காணித்து வந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், கடந்த 24ஆம் தேதி இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 125 கிராம் தங்க நகைகள், மூன்று கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சொர்ணம், உறவினர்களின் உதவியுடன் திண்டுக்கல் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், ஏஐ தொழில்நுட்பமான “Face Recognition System” உதவியுடன் குற்றவாளியின் அடையாளம் கண்டறியப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த விஜய் சங்கர் என்பவர் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து 125 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.2.30 லட்சம் பணம், ஒரு கார் மற்றும் நான்கு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விஜய் சங்கர் மீது ஏற்கனவே பல கொள்ளை மற்றும் போலி பாஸ்போர்ட் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வாடகை கார்களில் போலி நம்பர் பிளேட் பொருத்தி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு, திருடிய நகைகளை அடமானம் வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய் சங்கரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
