கரூர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்த சம்பவம், தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக அரசு வேலை வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு, எதிர்க்கட்சியான திமுக மட்டுமின்றி, ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.
அரசு வேலையா? அரசியல் தந்திரமா?
கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 32 உயிர்கள் பலியான நிலையில், சி.பி.ஐ. விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. .பி.ஐ. விசாரணை முழுமையாக முடிவடையாத நிலையில், அவசர அவசரமாக அரசுப் பணி வழங்குவது ஏற்புடையதல்ல. இது விசாரணையை நீர்த்துப்போகச் செய்யும். மக்களின் அனுதாபத்தைத் தேடும் அரசியல் தந்திரம் என திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகளும் இந்த நடவடிக்கையை கொள்கை ரீதியாக எதிர்ப்பது ஆளும் தரப்பிற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கண் விழித்துப் படித்தால் வேலை கிடைக்காது
இந்த விவகாரத்தில் திமுகவின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் அரசுப் பணிகளை, ‘விசுவாசத்தின்’ அடிப்படையில் ஆளும் தரப்பு மடைமாற்றுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது பதிவில்,
‘‘#அதானே
தன்னைக்
காணவந்து
நெரிசலில்
செத்தால்
அரசு உத்தியோகம்…
தன்னை வைத்து
சினிமா
எடுத்தவருக்கு
டெல்லி
பிரதிநிதி பதவி…
தன்னை போட்டோ
எடுத்தவருக்கு
பிலிம்
சிட்டியில்
பொறுப்பு…
பேசாம…
அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தைக்
கலைத்துவிட்டு
அதனை
அரசியல்
பணி தேர்வாணையம்
ஆக்கலாம்..
அப்படியே
கண் விழித்து
படித்தால்
எல்லாம்
கிடைக்காது…
என்னைக்
காண வந்து
மிதிபட்டு
மரித்தால் மட்டுமே
அரசாங்க
வேலை என்று
அறிவிப்பும்
செய்து
விடலாமே…!
என்னநாஞ்
சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார்.
பொதுவாக, அரசுப் பணிகளும் முக்கியப் பதவிகளும் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், சினிமா துறையில் தன்னுடண் பணியாற்றியவர்களுக்கும், தனது பரப்புரையில் உயிரிழந்தவர்களுக்கும் அடுத்தடுத்து பதவிகளையும் வேலைகளையும் வழங்குவது, “அரசாங்கத்தை ஒரு ரசிகர் மன்றம் போல விஜய் கையாள்கிறாரா?” என்ற கடுமையான கேள்வியை எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுப்பியுள்ளது.
சி.பி.ஐ. விசாரணை ஒருபுறம் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்க, தகுதிவாய்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாக்கும் வகையிலான திமுகவின் இந்த ‘டிஎன்பிஎஸ்சி’ விமர்சனம், அரசுத் தரப்பிற்கு மிகப்பெரிய அரசியல் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு ஆளும் தரப்பு என்ன பதில் சொல்லப் போகிறது?
