25 மாவட்டச் செயலாளர்களைத் தூக்கியெறிந்த எடப்பாடி பழனிசாமி, லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் விஷயத்தில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை இரண்டாகப் பிளந்து, அதை தவெக-வின் காலடியில் சமர்ப்பிக்க ஒரு ரகசிய ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதற்கு மையப்புள்ளியாக இருப்பவர் லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ். ஐ.ஜே.கே-வில் இருந்து எஸ்.பி. வேலுமணி மூலமாக அதிமுகவிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட லீமா ரோஸ், இன்று அதிமுகவின் அடிமட்டத்தையே அசைத்துப் பார்க்கும் சக்தியாக உருவெடுத்துள்ளார்.
விஜய்க்கு பாலமாக லீமா ரோஸ்
தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, “அதிமுக – தவெக கூட்டணி” பற்றிப் பேசிய முதல் நபர் லீமா ரோஸ் தான். சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு விஜய் சென்றபோது, அங்கே லீமா ரோஸ் இருந்தது தற்செயல் அல்ல. அது ஒரு திட்டமிட்ட அரசியல் காய்நகர்த்தல். தவெகவின் பின்னணியில் இருந்து இயங்கும் லீமா ரோஸின் மருமகன் ஆதவ் அர்ஜுனா ஒருபுறம், கட்சிக்குள் இருந்துகொண்டே வேலுமணி தரப்பிற்கும் தவெக-விற்கும் பாலமாக இருக்கும் மாமியார் மறுபுறம் என அதிமுகவின் ‘இரட்டை இலை’ இப்போது ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளது.
பதவி தப்பியது எப்படி?
விஜய்க்கு ஆதரவு தெரிவித்த மாவட்டச் செயலாளர்கள் வீதிக்கு அனுப்பப்பட்ட நிலையில், லீமா ரோஸ் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க இ.பி.எஸ் தயங்குவது ஏன்? வேலுமணி தரப்பிற்கு அமைச்சர் பதவி என்கிற பேச்சு எழும்போது, லீமா ரோஸை தவிர்க்க முடியாது என்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ள. மாமியார் எம்.எல்.ஏ, மருமகன் தவெக-வின் முக்கிய புள்ளி – இந்த ‘பவர்ஃபுல்’ கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சுவது வெளிப்படையாகத் தெரிகிறது.

தவெக-வுக்கு பலம் சேர்க்க அதிமுகவை இரண்டாகப் பிரிக்கத் துணியும் இந்த அதிகாரப் போக்கினால், தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஒரு குடும்பத்தின் அரசியல் லாபத்திற்காகத் தொண்டர்களின் உழைப்பால் உருவான இயக்கம் பலிகடா ஆக்கப்படுவதை அதிமுக விசுவாசிகள் ஏற்கத் தயாராக இல்லை.
மருமகன் ஒரு பக்கம் வலை விரிக்க, மாமியார் மறுபக்கம் அதிமுகவின் பலத்தை உடைக்க அதிமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சிக்கியிருப்பதுதான் காலத்தின் கொடுமை. இதில் இன்னொரு முக்கிய தகவலாக பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறுகையில், ” எடப்பாடி பழனிசாமி, லீமாரோஸிடம் 100 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டுதான் லால்குடியில் போட்டியிட சீட் ஒதுக்கினார். ஆகையால் தான் லீமா ரோஸை நீக்க எடப்பாடி பழனிசாமி தயங்குகிறார்” எனக் கூறியுள்ளது அதிமுகவினரின் ரத்தத்தை சூடாக்கியுள்ளது.
