சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
உடல்நலப் பரிசோதனைகளுக்காக டி. ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக கனிமொழி கருணாநிதி மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ள டி. ராஜாவை நேரில் சந்தித்த அவர், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டி. ராஜாவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக விசிக தலைவர் தொல். திருமாவளவனும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் திருமாவளவனும் கனிமொழி கருணாநிதியும் தற்செயலாக நேரில் சந்தித்துக் கொண்டனர். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடிக் கொண்டனர்.

மருத்துவமனை வளாகத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்ட இந்தக் காட்சிகள் தற்போது ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறிய பின்னர், கனிமொழி கருணாநிதியும் தொல். திருமாவளவனும் பொதுவெளியில் நேரில் சந்தித்துக் கொண்ட நிகழ்வாக இது அமைந்துள்ளது.
இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என்றும், மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சுமார் ஐந்து நிமிடங்கள் நேருக்கு நேர் சந்தித்து உரையாடியதாக கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின்போது சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசும் உடனிருந்தார். கனிமொழி கருணாநிதி, அமைச்சர் வன்னியரசுடன் நீண்ட நேரம் பேசியதாகவும், அதேபோல் தொல். திருமாவளவனும் அமைச்சர் வன்னியரசும் கனிமொழியுடன் நீண்ட நேரம் உரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டி. ராஜாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளனர். அவர்கள் மருத்துவர்களிடம் டி. ராஜாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளனர்.

இதனால், ஒரே மருத்துவமனை வளாகத்தில் டி. ராஜாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்வு தற்போது கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, திருமாவளவன் மற்றும் கனிமொழி கருணாநிதி ஆகியோர் பரஸ்பரம் நேரில் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்ட காட்சிகள் அரசியல் வட்டாரத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.
