தமிழ்நாடு தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டையின் இரண்டாவது மாடியில் தற்போது ஒரு புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனின் செயல்பாடுகள் குறித்து, உளவுத்துறை சேகரித்த ரகசிய அறிக்கை தற்போது முதல்வர் விஜய்யின் மேசைக்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைச் செயலகத்தின் இரண்டாவது மாடியில்தான் போக்குவரத்துத் துறை அமைச்சரின் அலுவலகம் அமைந்துள்ளது. அமைச்சரைச் சந்திப்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். ஆனால், அமைச்சரை அத்தனை எளிதில் யாராலும் சந்தித்துவிட முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“அமைச்சர் பிஸியாக இருக்கிறார், காத்திருங்கள்” என்ற ஒரே பதிலைத்தான் அவரது அலுவலக ஊழியர்கள் நாள் முழுவதும் கூறி வருவதாகப் பார்வையாளர்கள் புலம்புகின்றனர். இதனால், அமைச்சரைச் சந்திக்க வருபவர்கள் நாள் கணக்கில் கோட்டை காரிடாரிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அதீதக் கூட்ட நெரிசலால், அதே தளத்தில் உள்ள மற்ற அமைச்சர்களைப் பார்க்க வரும் விசிட்டர்களுக்கும் இடமில்லாமல் பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
ஃபேன்சி நம்பருக்கு முக்கியத்துவமா?
அமைச்சரின் மீதான மற்றொரு முக்கிய குற்றச்சாட்டு, அவர் போக்குவரத்துத் துறை சார்ந்த தொழிற்சங்கங்களைச் சந்திக்க மறுப்பதுதான். ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் எனப் போக்குவரத்துத் துறையோடு நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க வந்தாலும், “உங்களது பிரச்சனைகள் எல்லாம் எனக்குத் தெரியும், என்னை நேரில் பார்க்க வேண்டிய அவசியமில்லை” எனக் கூறி, அவர்களைச் சந்திக்காமலேயே திருப்பி அனுப்புவதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், கார்களுக்கான ஃபேன்சி எண்களை வாங்குவது தொடர்பான கோப்புகளுக்கு அமைச்சர் தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் தருவதாகவும், அந்த எண்களைப் பெறத் தன்னைத்தான் நேரில் சந்திக்க வேண்டும் என அவர் கண்டிப்பு காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலக அளவிலேயே முடிய வேண்டிய இந்த ஃபேன்சி எண் விவகாரத்திற்கு, அமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்பதால் அங்கும் ஒரு பெரும் கூட்டம் காத்துக் கிடக்கிறது.
அதிகாரிகளின் அலட்சியம்
அமைச்சர் மட்டுமல்லாது, போக்குவரத்துத் துறையின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பலரும் தங்களது தொலைபேசி அழைப்புகளை முறையாக ஏற்பதில்லை என்றும், கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
முதல்வர் விஜய் கையில் ரிப்போர்ட்
கோட்டையின் இரண்டாவது மாடியில் நிலவும் இந்தத் தொடர் நிர்வாகக் குளறுபடிகள், கூட்ட நெரிசல்கள், அமைச்சரின் செயல்பாடுகள் அனைத்தையும் உளவுத்துறை மிகத் துல்லியமாகக் கண்காணித்து நோட்ஸ் எடுத்துள்ளது. இந்தத் தகவல்களை உள்ளடக்கிய ஒரு விரிவான ரகசிய அறிக்கை, தற்போது தமிழக முதல்வர் விஜய்யின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிர்வாகக் கட்டுப்பாடுகளில் கண்டிப்புடன் செயல்பட்டு வரும் முதல்வர் விஜய், தன் அமைச்சரவை சகா மீதான இந்த உளவுத்துறை ரிப்போர்ட்டின் அடிப்படையில் என்ன மாதிரியான அதிரடி நடவடிக்கையை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
