கரூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு, தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து இந்தத் தகுதி அடிப்படையிலான பணி ஆணைகளை வழங்க உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரையின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே கட்சி மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து தலா ரூ. 20 லட்சம் வரை நிதியுதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, அந்தப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் மிக முக்கியமான இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
விபத்தில் பலியான 41 நபர்களின் குடும்ப விவரங்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களின் கல்வித் தகுதிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முழுமையாகச் சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டுள்ளன. அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசுத் துறைகளில் பணி நியமனம் வழங்குவதற்கான கோப்புகளில் முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜூலை 10-ல் கரூர் பயணம்
இத்திட்டத்தின்படி, வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூரில் பிரம்மாண்ட அரசு விழா ஒன்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களை மேடைக்கு அழைத்து, அவர்களுக்கான அரசுப் பணி ஆணைகளைத் தன் கரங்களால் நேரில் வழங்கவிருக்கிறார்.
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற ஒரு மாத காலத்திற்குள், கடந்த காலத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு அளிக்கும் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் தற்போதே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இச்செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு,நிகழ்ச்சி நிரல் விரைவில் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
