பிரிட்டிஷ் ஆட்சியின் காலனி நாடாக இருந்து சுதந்திரம் பெற்ற அமெரிக்கா, தனது 250-வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகிறது. இது தொடர்பான சிறப்புத் தொகுப்பை காணலாம்.
இன்று உலக நாடுகளை பொருளாதார மற்றும் ராணுவ வலிமையால் செல்வாக்கு செலுத்தும் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்கா, ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த காலனி நாடாக இருந்தது. பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 1776-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்கா சுதந்திரம் பெற்றது.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 250-வது சுதந்திர தினம் என்பதால், “Freedom 250” என்ற பெயரில் தனி இணையதளம் உருவாக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த விழாவை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் மற்றும் அவரது கையொப்பத்துடன் கூடிய சிறப்பு பாஸ்போர்ட்டுகள், வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் நினைவு நாணயங்கள், சிறப்பு அஞ்சல் தலைகள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்தக் கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. ஜனவரி 5-ஆம் தேதி வரை வாஷிங்டனில் உள்ள நினைவுத் தூணில், நவீன புரொஜெக்ஷன் மேப்பிங் தொழில்நுட்பத்தின் மூலம் 360 டிகிரி காட்சியில் அமெரிக்க வரலாற்றை எடுத்துரைக்கும் வீடியோக்கள் திரையிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 250 ஆண்டுகால சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில், “Freedom Truck” என்ற பெயரில் ஆறு அதிநவீன நடமாடும் அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டு, கடந்த ஜனவரி 21-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பயணம் செய்து வருகின்றன. இந்தப் பயணம் டிசம்பர் 6-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
கடந்த மே 17-ஆம் தேதி, வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு, நாட்டை கடவுளுக்கு மீண்டும் அர்ப்பணிக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து, மே 25-ஆம் தேதி அமெரிக்க ராணுவ வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் “Spirit of America” என்ற பெயரில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.
மேலும், கடந்த ஜூன் 15-ஆம் தேதி, அமெரிக்காவின் சுதந்திர வரலாற்றில் முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படும் UFC சண்டைப் போட்டிகள், முதல் முறையாக வெள்ளை மாளிகையில் பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டன.
வாஷிங்டன் டி.சி.யில் ஜூன் 24-ஆம் தேதி நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில், அமெரிக்க கடற்படையின் “Pershing’s Own” இசைக்குழு, பாதுகாப்புப் படை பாடகர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைக் குழுக்கள் பங்கேற்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 25 முதல் ஜூலை 10 வரை தேசிய கண்காட்சி நடைபெற உள்ளது.
ஜார்ஜ் வாஷிங்டன் உள்ளிட்ட நான்கு முன்னாள் அமெரிக்க அதிபர்களின் முகங்கள் செதுக்கப்பட்டுள்ள மவுண்ட் ரஷ்மோர் பகுதியில், ஜூலை 3-ஆம் தேதி சிறப்பு ராணுவ மரியாதை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கை காட்சிகள் நடைபெற உள்ளன.
மேலும், 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “Operation Sail” நிகழ்ச்சியின் நிறைவை குறிக்கும் வகையில், ஜூலை 4 முதல் 8-ஆம் தேதி வரை நியூயார்க் துறைமுகத்தில் உலகின் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் பங்கேற்கும் சிறப்பு அணிவகுப்பும் நடத்தப்படவுள்ளது.
இந்த 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் உச்ச நிகழ்வாக, ஜூலை 4-ஆம் தேதி வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் பிரம்மாண்ட சுதந்திர தின விழாவும், கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது
