விசிக உள்ளே, இதுவரை இல்லாத ஒரு புதிய தலைவலி அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அவரது குடும்ப வட்டாரத்திலிருந்தே கிளம்பியுள்ளது. தமிழகத்தில் வாரியத் தலைவர் பதவிகளுக்கான நியமனங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் வேளையில், விசிக-வில் அரங்கேறும் இந்த ‘உள்வீட்டுக் குடுமிப்பிடிச் சண்டை’ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சிக்காகப் பல வருடங்களாக உழைத்து, தற்போது அதிருப்தியில் இருக்கும் சீனியர் நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தும் அஸ்திரமாக வாரியத் தலைவர் பதவிகளைத் திருமாவளவன் கையில் எடுத்துள்ளார். “அரசிடம் உங்கள் பெயர்களைத்தான் பரிந்துரை செய்திருக்கிறேன். நிச்சயம் நல்ல செய்தி வரும்” என்று நிர்வாகிகளிடம் கூறி, கட்சியின் உட்கட்சிப் பூசலை அவர் ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்திருந்தார்.
ஆனால், இப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சியாக, அவரது சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சில முக்கிய உறவினர்களே, “கட்சிக்காரர்களுக்குக் கொடுப்பது இருக்கட்டும்… எங்களுக்கும் வாரியத் தலைவர் பதவிகள் வேண்டும்!” என்று நேரடியாகவே கோதாவில் குதித்து, அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
வழக்கமாகத் தமிழக அரசியலில் வாரிசு அரசியலும், குடும்ப ஆதிக்கமும் பரவலாக விமர்சிக்கப்படும் ஒரு விஷயம். ஆனால், திருமாவளவன் இதுவரை தனது குடும்ப உறுப்பினர்களை அதிகார மையங்களுக்குள் கொண்டு வராமல், ஒரு தூய்மையான அரசியல் பிம்பத்தைப் பேணி வருகிறார். சொந்தக் குடும்பத்தினரைத் தலைவராக்கவோ அல்லது பதவிகளில் உட்கார வைக்கவோ அவருக்குச் சற்றும் விருப்பமில்லை என்றே கூறப்படுகிறது.
இருந்தபோதிலும், “நாங்கள் இவ்வளவு காலம் உங்களுக்குப் பின்னால் நின்றதற்கு எங்களுக்கு என்ன லாபம்?” என்ற பாணியில் சொந்தக்காரர்களிடமிருந்து நாளுக்கு நாள் வரும் அழுத்தங்கள் விசிக தலைவரைப் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருபுறம் விசுவாசமான கட்சிக்காரர்கள், மறுபுறம் பிடிவாதம் பிடிக்கும் சொந்த பந்தங்கள் என இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார் திருமாவளவன். இன்னொருபுறமோ, தேர்தலுக்கு முன் விஜயை ஆர்.எஸ்.எஸின் கைப்பிள்ளை என்றார் திருமா. இப்போது பதவிக்காக வந்த பாதையை மறந்துவிட்டு விஜய் பக்கம் முழுவதுமாக சாய்ந்து விட்டார். அந்த வகையில் ஆர்.எஸ்.எஸின் பேரப்பிள்ளையாகி விட்டார் திருமா என திமுக-வினர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
