அரசு அலுவலகங்களில் முக்கிய பிரமுகர்களின் நாற்காலிகளில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் துண்டு போடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு, மணிப்பூரைச் சேர்ந்த 14 வயது இளம் காலநிலை ஆர்வலர் லிசிபிரியா கங்குஜம், தமிழக முதல்வர் ஜோசப் விஜயை டேக் செய்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவர் தனது பதிவில்,
“ஹலோ விஜய் சார், இந்தியாவில் நாற்காலிகளில் துண்டு பயன்படுத்தும் விஐபி நடைமுறையை நாம் முடிவுக்கு கொண்டு வர முடியுமா? முதல்வர்கள் என்றால் விஐபி தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
இந்த துண்டு பயன்படுத்தும் முறையை இனி அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் சிறிய அதிகாரிகள் வரை அனைவரும் பின்பற்றாமல் மாற்றம் கொண்டு வரலாம். நீங்கள் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள். இந்த மாற்றத்தை நீங்கள் முன்னெடுக்க முடியும எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, முதல்வர் விஜயின் நாற்காலியில் வெள்ளை துண்டு இல்லாத புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த இளம் சிறுமியின் கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் முதல்வர் விஜய் நாற்காலியில் மீண்டும் வெள்ளை துண்டு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி, அது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
