திண்டுக்கல்லில் FQL மற்றும் VG டிரேடிங் என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பொதுமக்களிடம் சுமார் ரூ.150 கோடி வரை ஆன்லைன் முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், குற்றவாளியை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்தின் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கற்களை வீசித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், இரண்டு மாதங்களில் முதலீட்டுத் தொகை முழுமையாகத் திரும்பக் கிடைக்கும். அதன்பிறகு அடுத்தடுத்த மாதங்களில் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும்” என ஆசை வார்த்தைகளைக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக இந்த நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடக்கத்தில் முதலீடு செய்த சிலருக்கு வாக்குறுதி அளித்தபடி லாபம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை நம்பிய அவர்கள், தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரையும் திட்டத்தில் சேர்த்து முதலீடு செய்ய வைத்துள்ளனர். இதனால், குறுகிய காலத்தில் இந்த முதலீட்டுத் திட்டத்தில் ஏராளமானோர் இணைந்துள்ளனர்.
இந்த மோசடி திட்டத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சிக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பலர் தங்களது சேமிப்புப் பணம் மட்டுமின்றி, நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, திடீரென ஆன்லைன் முதலீட்டுப் பக்கங்கள் முடக்கப்பட்டதுடன், திண்டுக்கல்லில் செயல்பட்டு வந்த FQL நிறுவனத்தின் அலுவலகங்களும் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தங்களது பணம் திரும்பக் கிடைக்காது என்பதை உணர்ந்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.
இந்த மோசடி ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் மட்டுமின்றி, எம்.எல்.எம். எனப்படும் நெட்வொர்க் மார்க்கெட்டிங் முறையிலும் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலீடு செய்த ஒருவர் புதிதாக மற்றவர்களைத் திட்டத்தில் சேர்த்தால், அவருக்கு கூடுதல் கமிஷன் மற்றும் போனஸ் வழங்கப்படும் என ஆசை காட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் வருமானத்தை நம்பி, ஏற்கனவே திட்டத்தில் இணைந்தவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை அணுகி, பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது நிறுவனம் முடங்கியுள்ள நிலையில், “நீங்கள் கூறியதால்தானே பணத்தை முதலீடு செய்தேன்” என்று முதலீட்டாளர்களுக்குள் தகராறுகளும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதில் தினமும் குறிப்பிட்ட நபர்களுக்கு குறிப்பிட்ட அளவு லாபம் கிடைத்ததாகக் கூறப்படும் போலியான ஸ்கிரீன்ஷாட்கள் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி மேலும் மேலும் பணம் முதலீடு செய்ய வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று மோசடி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படும் முக்கிய இடைத்தரகர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவோ அல்லது விசாரணைக்காக அழைத்துச் செல்லவோ போலீசார் வாகனத்தில் ஏற்றியபோது, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போலீஸ் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது, “எங்கள் பணத்தை வாங்கிக் கொடுங்கள் சார்… அவனை எங்களிடம் விடுங்கள்… எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?” என்று பொதுமக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர். போலீசார் வாகனத்தை அங்கிருந்து நகர்த்த முயன்றபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரிய கற்களை எடுத்து போலீஸ் வாகனத்தின் மீது வீசித் தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து திண்டுக்கல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோசடி தொடர்பாக இடைத்தரகர்கள் மட்டுமின்றி, இதன் பின்னணியில் செயல்பட்ட முக்கிய நபர்கள் மற்றும் நெட்வொர்க் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், தொடர்புடைய வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், FQL மற்றும் VG டிரேடிங் மூலம் பணத்தை இழந்தவர்கள் தங்களது ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள் அல்லது வங்கி அறிக்கை மற்றும் FQL ஐடி ஆகியவற்றுடன் அருகிலுள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். புகார் அளிப்பதற்கு எவ்வித காலக்கெடுவும் இல்லை என்றும், புகார் அளிக்கும் அனைவரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாக சேர்க்கப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆன்லைன் வர்த்தகம், பகுதி நேர வேலை அல்லது முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்குவதாகக் கூறி யாரேனும் பணம் கேட்டால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாகும் என்ற பேராசையில், கூலித் தொழிலாளர்கள் முதல் நடுத்தரக் குடும்பத்தினர் வரை பலரும் தங்களது வாழ்நாள் சேமிப்பை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது நிறுவனங்கள் முடங்கியுள்ள நிலையில், அவர்களின் சேமிப்புப் பணம் கேள்விக்குறியாகியுள்ளது.
பேராசை பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றொரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அதிக லாபம், பணம் இரட்டிப்பு போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் சட்டப்பூர்வத் தன்மையை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும் என்பதையே இந்த மோசடி சம்பவம் உணர்த்துகிறது.
