Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை வீட்டிற்குள் வைத்து உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடூர வழக்கில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 8 ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேடப்பட்டி அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற பாண்டீஸ்வரிக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், பரமேஸ்வரி தனது கணவர் கண்ணனைப் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கண்ணனும் மனைவியுடன் தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்பாமல், திருமண உறவை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பரமேஸ்வரிக்கு பணம் வழங்கி பிரிந்து செல்வது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த சமரசத்தை பரமேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "அரசியலில் குதிக்கும் குந்தவை..? மதுரையை அதிரவைத்த 'திரிஷா போஸ்டர் பின்னணி!"

இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி அதிகாலை, கண்ணனின் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, பரமேஸ்வரி, அவரது தாய் முருகேஸ்வரி மற்றும் சகோதரர் ராஜபாண்டி ஆகிய மூவரும் அங்கு சென்றுள்ளனர்.

Republic Tamil

வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாத வகையில், வீட்டின் வெளிப்பக்கக் கதவை பூட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டின் மீது பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை ஊற்றி தீ வைத்துவிட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து எழுந்துள்ளனர். ஆனால், கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. தீ வேகமாகப் பரவியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொடூர சம்பவத்தில் கண்ணன், அவரது தந்தை வேலு, தாய் பேச்சியம்மாள், சகோதரி சுகன்யா மற்றும் சுகன்யாவின் மூன்று குழந்தைகளான சங்கீதா, சஞ்சித், வினித் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதையும் படியுங்க  "கோர்ட்டில் ஜெயித்த 'ஜெயம்' ரவி! ஆர்த்தியின் ₹40 லட்சம் கோரிக்கைக்கு செக் வைத்த நீதிமன்றம் - விவாகரத்து வழக்கில் மாஸ் ட்விஸ்ட்!"

உயிரிழந்தவர்களின் விவரம்:

  • கண்ணன் — 25 வயது
  • வேலு — 60 வயது
  • பேச்சியம்மாள் — 55 வயது
  • சுகன்யா — 35 வயது
  • சங்கீதா — 17 வயது
  • சஞ்சித் — 12 வயது
  • வினித் — 10 வயது

இந்த சம்பவம் தொடர்பாக சேடப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் பரமேஸ்வரி, அவரது தாய் முருகேஸ்வரி மற்றும் சகோதரர் ராஜபாண்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு மதுரை 6-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், பொறுப்பு நீதிபதி எம். உதயவேலவன் தீர்ப்பை வழங்கினார்.

அதில், பரமேஸ்வரி, முருகேஸ்வரி மற்றும் ராஜபாண்டி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. 7 பேரை கொலை செய்த குற்றத்திற்காக மூவருக்கும் தலா 8 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

மேலும், வீட்டிற்கு தீ வைத்த குற்றத்திற்காக மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்க  “1330 குறளையும் ‘லைஃப் ஸ்டோரி’ மாதிரி ரசிக்க வைத்தார் அமைச்சர் ராஜ்மோகன்!”

அதேநேரத்தில், மூன்று குற்றவாளிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரோதம் மற்றும் பழிவாங்கும் எண்ணம் காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை வீட்டிற்குள் வைத்து உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவம் நடைபெற்று 11 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மூன்று குற்றவாளிகளுக்கும் தலா 8 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago