தமிழ்நாட்டில் வெள்ளை சர்க்கரையின் விலை வரலாறு காணாத வகையில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகரித்து, சந்தையில் ரூ.75 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் பண்டிகைக் காலங்களில் இது மேலும் உயர்ந்து ரூ.100-ஐ எட்டக்கூடும் என வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்த கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும், மக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் கூடுதல் சர்க்கரை வழங்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: எரிபொருள் தேவைகளுக்காக எத்தனால் தயாரிப்பில் சர்க்கரை ஆலைகள் கவனம் செலுத்துவது சர்க்கரை பற்றாக்குறைக்கு ஒரு காரணமாக இருந்தாலும், கரும்பு சாகுபடி பரப்பு வெகுவாகக் குறைந்து வருவதே இதன் முதன்மையான காரணமாகும். 2022-ஆம் ஆண்டில் 58.85 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2024-ஆம் ஆண்டில் 54.49 லட்சம் ஹெக்டேராகச் சரிந்துள்ளது. 2020-க்கு முன் 15 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, 2025-இல் 5 லட்சம் ஏக்கராகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டில் 2.8 கோடி டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, 2024-இல் 1.59 கோடி டன்னாகக் குறைந்துவிட்டது. கரும்பு உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையிலும், அதற்கேற்ப கொள்முதல் விலை உயர்த்தப்படாததே விவசாயிகள் கரும்பு சாகுபடியைக் கைவிடக் காரணம். ஒரு டன் கரும்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை மற்றும் மொலாசஸ் உள்ளிட்ட துணைப் பொருள்கள் மூலம் ஆலைகளுக்கு ரூ.21,000-க்கும் மேல் வருவாய் கிடைக்கிறது. ஆனால், மத்திய அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை வெறும் ரூ.3,383 மட்டுமே ஆகும்.
எனவே, கரும்பு சாகுபடி பரப்பையும் சர்க்கரை உற்பத்தியையும் மீண்டும் அதிகரிக்க ஒரு டன் கரும்புக்குக் குறைந்தபட்சம் ரூ.5,000 கொள்முதல் விலையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் பொங்கல் திருநாள் வரை அடுத்த 6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கத் தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
