கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னபேளகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பா (32). இவரது மனைவி பிரேமா (28). இருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தனுஷ் (11), வெற்றி (8) ஆகிய மகன்களும், லக்ஷயா (10) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகன்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். மகள் லக்ஷயா தந்தை பராமரிப்பில் உள்ளார்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி கணவர் எல்லப்பா மீது ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரேமா புகார் அளித்தார். இதனையடுத்து இருதரப்பையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ்வதாக காவல்நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து மூத்த மகன் தனுசுக்கு வரும் 30ம் தேதி பிறந்தநாள் என்பதால் புத்தாடை வாங்கி கொண்டு காரில் சென்று மகன்களை பார்த்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இரவு நேரத்தில் காரில் வந்து கொண்டிருந்த போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பிரேமா காரில் இருந்த கத்தியை எடுத்து கணவனை குத்தியுள்ளார். இதனையடுத்து கணவர் எல்லப்பா கத்தியை பிடுங்கி பிரேமாவை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி பிரேமா ஓடும் காரிலேயே துடி துடித்து உயிரிழந்தார். பின்னர் நடந்த சம்பவத்தை கூறி காவல் நிலையத்தில் எல்லப்பா சரணடைந்தார்.
இதையடுத்து, பிரேமாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு எல்லப்பா அடிக்கடி தகராறு செய்து வந்தது தெரியவந்தது. சினிமா பாணியில் ஓடும் காரில் இருவரும் மாறி மாறி கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

