Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகம் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், மாநிலத்தின் நிதிநிலை குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள கடன் பத்திரங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களான ஏப்ரல் முதல் ஜூலை வரை தமிழக அரசு ரூ.32,925 கோடி கடன் பெற்றுள்ளது.

ஜூன் மாதம் வரை சுமார் ரூ.20,881 கோடியாக இருந்த கடன் அளவு, ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் ரூ.1,244 கோடி கூடுதலாக உயர்ந்துள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டின் தொடக்க நான்கு மாதங்களிலேயே தமிழகத்தின் கடன் சுமை கணிசமாக அதிகரித்துள்ளது.

மாநில அரசின் வருவாய்க்கும் செலவினத்திற்கும் இடையே நிலவும் பெரிய இடைவெளியே, கடன் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், மாநில ஜிஎஸ்டி, மத்திய அரசின் வரிப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தமிழக அரசுக்கு சுமார் ரூ.89,718 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்க  "கோடி ரூபாய் மோசடி வழக்கு! சிக்கிய தவெக பிரமுகர்... அதிரடி காட்டிய விஜய்!"

ஆனால், இதே காலகட்டத்தில் அரசின் மொத்த செலவினம் சுமார் ரூ.1.23 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதன் காரணமாக, வருவாய் மற்றும் செலவுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து, வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ.25,267 கோடியாக உயர்ந்துள்ளது.

வருவாயைவிட செலவு அதிகமாக இருக்கும் நிலையில், மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும், அரசு நிர்வாகத்தின் கட்டாய செலவுகளை மேற்கொள்ளவும், ஏற்கனவே பெற்ற கடன்களுக்கு வட்டி செலுத்தவும் தமிழக அரசு தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Republic Tamil

இதில், அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையாக இருப்பது ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கான வட்டி செலுத்துதலாகும். ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் சுமார் ரூ.21,176 கோடி வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியச் செலவுக்கும் இந்த நான்கு மாதங்களில் சுமார் ரூ.17,237 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கும் அரசுக்கு கணிசமான நிதி தேவைப்படுகிறது.

இதையும் படியுங்க  “டெண்டரா? இல்லை முன்கூட்டியே முடிவா?… சமூக வலைதளங்களில் வெடிக்கும் கேள்விகள்!”

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழக அரசின் வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை சுமார் ரூ.85,876 கோடியாக இருந்த வருவாய், இந்த ஆண்டு ரூ.89,718 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த ஆண்டு ரூ.1.09 லட்சம் கோடியாக இருந்த செலவு, இந்த ஆண்டு ரூ.1.23 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதனால், வருவாய் அதிகரித்திருந்தாலும், அதைவிட வேகமாக செலவினம் உயர்ந்துள்ளதால் அரசின் நிதிப் பற்றாக்குறையும், கடன் தேவையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு, நடப்பு நிதியாண்டில் மொத்தம் சுமார் ரூ.1.22 லட்சம் கோடி வரை கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே உள்ள கடன் சுமை, வட்டி செலுத்துதல், ஓய்வூதியச் செலவுகள் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான நிதித் தேவை ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது புதிய அரசுக்கு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது.

ஒருபுறம் தொழில் முதலீடுகளை ஈர்த்து மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், மறுபுறம் தொடர்ந்து அதிகரித்து வரும் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையை குறைத்து, நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதுடன், வளர்ச்சித் திட்டங்களுக்கும் தேவையான நிதியை ஒதுக்குவது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இதையும் படியுங்க  அப்பா வீட்டிலேயே இருக்கட்டும்… 'எதிர்க்கட்சித் தலைவர்' பதவியை விடமாட்டேன்..! பதவி வெறியில் உதயநிதி..?

இந்த நிதி அழுத்தத்தை சமாளிக்கவும், மாநிலத்தின் வருவாய் ஆதாரங்களை பெருக்கவும், செலவினங்களை கட்டுப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எத்தகைய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பதையே தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago