சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட வடசென்னை பகுதியில் இருதரப்பு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பினரும் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நடுரோட்டில் மாறிமாறி தாக்கிக் கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகே உள்ள பழைய சிறைச்சாலை பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குடியிருப்பு பகுதியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு, பின்னர் மோதலாக மாறியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தட்டிக் கேட்டதாகவும், இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்ததாக கூறப்படும் போண்டா விஜய் என்பவர், அப்பகுதியில் இருந்த சில இளைஞர்களை கத்தியால் முதலில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொரு தரப்பினர் அவரை தாக்க முயன்றதாகவும், அவரிடம் இருந்த கத்தியை கார்த்திக் உள்ளிட்ட சிலர் பிடுங்கி, பின்னர் அவரை கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் போண்டா விஜய்க்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த மோதலில் மற்றொருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருதரப்பினரும் நடுரோட்டில் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாறிமாறி தாக்கிக் கொண்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனை நேரில் பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி அலறியடித்து ஓடினர். வாகன ஓட்டிகளும் அங்கிருந்து அவசரமாக வெளியேறினர். மேலும், அப்பகுதியில் இருந்த கடைகளும் பாதுகாப்பு கருதி அவசரமாக மூடப்பட்டன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யானைகவுனி போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிய விவகாரத்தில் ஏற்பட்ட தகராறே இந்த மோதலுக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில், இருதரப்பினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததா, பழிக்குப் பழி வாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மோதலில் ஈடுபட்டவர்களில் சிலர் மீது ஏற்கனவே அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். முதலில் தாக்குதலில் ஈடுபட்டது யார், மோதலில் நேரடியாக எத்தனை பேர் ஈடுபட்டனர், யார் முதலில் கத்தி அல்லது அரிவாளைப் பயன்படுத்தினர், மேலும் யாருக்கெல்லாம் காயம் ஏற்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மோதலில் ஈடுபட்ட முக்கிய நபர்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் இருதரப்பினர் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவம் வடசென்னையில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
