மதுரையில் காக்ரோச் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேரணியாக செல்கின்றனர். உச்சநீதிமன்ற விசாரணையின் போது கடந்த வாரம் தலைமை நீதிபதி, படித்த இளைஞர்கள் கரப்பான் பூச்சிக்கு சமமாக உள்ளதாக கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து “காக்ரோச் ஜனதா பார்ட்டி” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் முகநூல் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் கணக்குகள் தொடங்கப்பட்டன.
இந்த கணக்குகளை பின்தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, சுமார் 20 மில்லியன் வரை உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அந்த சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியா முழுவதும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு அதிகரித்து வரும் சூழலில், தற்போது மதுரையில் முதல்முறையாக இந்த இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பேரணியாக கிளம்பியுள்ளனர்.
படித்த இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் காந்தி மியூசியத்திலிருந்து தமுக்கம் தமிழ்நாடு சிலை வரை பேரணியாக செல்ல உள்ளனர்.
“கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திய இளைஞர்கள் வேலை இல்லாமல் கரப்பான் பூச்சி, ஒட்டுணிகள் மாதிரி இருப்பதாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பல்வேறு ஆய்வுகளும் இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதை காட்டுகின்றன. குறிப்பாக 20 முதல் 29 வயதுக்குட்பட்ட படித்த இளைஞர்களில் சுமார் 59 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் அந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு இளைஞர்கள் ஒருங்கிணைந்துள்ளனர். இதன் பின்னணியில், சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. அரசு இளைஞர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது.”
இதனைத் தொடர்ந்து, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் இந்த இளைஞர்கள் பேரணியாக புறப்பட்டுள்ளனர்.
