ராப்பர் அறிவு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இடையே, ‘என்ஜாய் என்ஜாமி’ (Enjoy Enjaami) பாடலின் ராயல்டி மற்றும் உரிமைத் தொகை தொடர்பாகப் பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதல், தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெடித்துள்ளது.
‘என்ஜாய் என்ஜாமி’ பாடலில் தான் ஒரு ‘இணைந்து பணியாற்றிய கலைஞர்’ (Collaborating Artist) என்ற வகையில் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டதாக அறிவு தெரிவித்துள்ளார். பாடல் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்தும், அதன் உரிமைகள் மற்றவர்களிடம் இருப்பதுடன், அதன்மூலம் கிடைக்கும் ராயல்டியையும் அவர்கள் பெற்று வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது கடின உழைப்புக்கான முறையான ஊதியமோ அல்லது பாடல் மீதான உரிமையோ தனக்கு வழங்கப்படவில்லை என்றும் அறிவு தெரிவித்துள்ளார்.

அறிவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குச் சந்தோஷ் நாராயணன் கடுமையாகப் பதிலளித்துள்ளார். தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியாக அறிவு முன்வைக்கும் வாதங்கள் அனைத்தும், வழக்கம்போல வெறும் கற்பனையே என்றும், அதில் துளியும் உண்மை இல்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும், எந்த இடத்திலும், எந்த ஊடகத்திலும் வேண்டுமானாலும் இது குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் சவால் விடுத்துள்ளார்.
தன்னை அனைத்து சமூக வலைதளங்களிலும் அறிவு ‘பிளாக்’ செய்துவிட்டதாகவும் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். “என்னை எல்லா இடங்களிலும் பிளாக் செய்துவிட்டு இப்படிப் பேசுவதா? நீங்கள் இங்கேயே கூட பேசலாம். நான் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவு மறைமுகமாகவும், நேரடியாகவும் சந்தோஷ் நாராயணனை விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல இவர்களுக்கிடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால், நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் இதுகுறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களின் தொடர் மோதலை ஊடகங்களும், நெட்டிசன்களும் “பத்த வச்சுட்டியே பரட்டை!” என்ற பிரபலமான மீம் வசனத்துடன் ஒப்பிட்டு வருகின்றனர். மேலும், இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட மனக்கசப்பின் காரணமாகத்தான் இந்தப் பஞ்சாயத்து இன்னும் ஓயாமல் மீண்டும் மீண்டும் வெடித்து வருகிறதா என்ற கேள்விகளையும் பலர் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, எக்ஸ் (X) தளத்தில் ரசிகர் ஒருவர், “பாடல் பாடிய தீ (Dhee) மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் சேர்ந்து அறிவிடமிருந்து இந்தப் பாடலைத் திருடிவிட்டனர்” (Stole) என்று பதிவிட்டிருந்தார்.
இந்த விமர்சனத்தைப் பார்த்த சந்தோஷ் நாராயணன் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். அறிவை ‘ஏமாற்றுக்காரர்’ (Dishonest), ‘கற்பனை உலகில் வாழ்பவர்’ (Delusional) எனக் கடுமையான வார்த்தைகளால் அவர் விமர்சித்துள்ளார்.
‘என்ஜாய் என்ஜாமி’ பாடலின் மூலம் கிடைத்த வருவாய், யூடியூப் மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் வாயிலாகக் கிடைத்த ராயல்டி உள்ளிட்ட வருவாய்கள் அனைத்தும் அறிவு, தீ மற்றும் தனக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்பட்டதாக சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

மேலும், பாடலில் இடம்பெற்றுள்ள அறிவின் பாட்டி வள்ளியம்மாளுக்குத் தேவையான அனைத்து நிதியுதவிகளும், உரிய அங்கீகாரமும் தங்களது தரப்பில் முறைப்படி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவு தொடர்ந்து பொய்யான பிரசாரங்களை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என்றும், தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களுடனும் பொதுவெளியில் அல்லது ஊடக விவாதத்தில் நேருக்கு நேர் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலின் வரிகளிலும், அதன் பின்னணியில் இடம்பெறும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு மற்றும் பூர்வகுடி மக்களின் உழைப்பைச் சித்தரிக்கும் கருத்துகளிலும் தனது சொந்தக் கற்பனையும், குடும்பப் பின்னணியும் முக்கியப் பங்கு வகிப்பதாக அறிவு தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், ஒட்டுமொத்தப் பாடலின் கிரெடிட்ஸும் பாடலைப் பாடிய தீ மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவருக்கே சேரும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் அறிவு குற்றம்சாட்டியுள்ளார்.
சுயாதீன இசையைத் தயாரிக்கும் நிறுவனமான ‘மாஜா’ (Maajja) மற்றும் சந்தோஷ் நாராயணன் தரப்பு, தனக்குக் கிடைக்க வேண்டிய முறையான ராயல்டி மற்றும் உரிமைகளை சட்டரீதியாக இன்னும் முழுமையாக வழங்கவில்லை என்றும் அறிவு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இவ்வாறு, ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலின் ராயல்டி, உரிமை மற்றும் கிரெடிட்ஸ் தொடர்பான விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், அறிவு – சந்தோஷ் நாராயணன் இடையேயான இந்தப் பிரச்சினை அடுத்தகட்டமாக எவ்வாறு செல்லும் என்பது சமூக வலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
