Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை 2026 ஆகஸ்ட் 5ஆம் தேதி நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி வரவேற்பும், கடும் விமர்சனமும் கலந்த வகையில் மதிப்பிட்டார்.

Republic Tamil

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘சேவை உரிமைச் சட்டம்’ பாமக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்த கோரிக்கை என்பதால் அதனை முழுமையாக வரவேற்பதாக அவர் தெரிவித்தார். மேலும், அண்ணன் சீர், தாய் மாமன் சீர் உள்ளிட்ட நலத்திட்டங்கள், முதியோருக்கான சிறப்பு மையங்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த அறிவிப்புகளையும் அவர் பாராட்டினார்.

அதே நேரத்தில், பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். விவசாயிகள் எதிர்பார்த்த கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும், கடந்த ஆண்டைவிட வேளாண்மைத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  "ரத்த வெள்ளத்தில் மூதாட்டி… தியேட்டரில் 'Blastu Blastu' கொண்டாட்டம்! தவெக அரசை அலறவிட்ட இபிஎஸ்!"

காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு வெறும் ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தருமபுரி காவிரி உபரி நீர்த் திட்டம் உள்ளிட்ட முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

கல்வித் துறைக்கும் கடந்த திமுக ஆட்சியில் ரூ.48,500 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.44,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மை போன்ற அடிப்படைத் துறைகளுக்கு போதிய நிதி வழங்கப்படவில்லை என்றார். “இந்த முக்கியத் துறைகளுக்கு குறைந்தபட்சம் 6 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் அரசு சுமார் 1 சதவீதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிப்பதாகவும், தமிழகத்தில் ஏராளமான தொடக்கப் பள்ளிகள் இன்னும் ஓராசிரியர் பள்ளிகளாகவே செயல்படுவதாகவும் சௌமியா அன்புமணி சுட்டிக்காட்டினார்.

மேலும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுமார் 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவது குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் விமர்சித்தார்.

இதையும் படியுங்க  அப்பாவிகளை சிக்க வைக்காதீங்க..! போதை ஒழிப்பு கூட்டத்தில் கொதித்த டிஜிபி..!

சென்னையின் கூவம், அடையாறு உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும், அவை வெறும் அழகுபடுத்தும் திட்டங்களா அல்லது கழிவுநீர் கலப்பை நிரந்தரமாகத் தடுக்கும் திட்டங்களா என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோல், தமிழகத்தை படிப்படியாக போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த அரசு, டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்தோ, அதில் பணிபுரிபவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்துவது குறித்தோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில், சேவை உரிமைச் சட்டம் உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், அரசு வேலைவாய்ப்பு மற்றும் மதுவிலக்கு போன்ற மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை. எனவே, தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

இதையும் படியுங்க  லாரன்ஸ் சொன்ன "தெரு நாய்" கதைக்கு பின்னால் இருக்கும் அசல் உண்மை என்ன?

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago