நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற NEET-UG 2026 தேர்வுத்தாள் கசிவு மற்றும் பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதம், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சால் கடும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, அவர் தனது உரையின்போது “முட்டாள்” மற்றும் “அந்த்பக்தர்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு “குட்டி ஸ்டோரி” கூறியதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவையில் பரபரப்பான சூழல் நிலவியது.
NEET தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் அதனைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள பொதுத் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ஒரு கதையை எடுத்துரைத்தார்.

அந்த மாணவர் கூறியதுபோல், உலகத்தில் மூன்று வகையான மனிதர்கள் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். முதல் வகையினர் எப்போதும் உண்மையைத் தேடி, திறந்த மனதுடன் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்பவர்கள். இரண்டாவது வகையினர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையுடன் மற்றவர்களின் கருத்துகளைக் கேட்க மறுப்பவர்கள். மூன்றாவது வகையினர், மற்றொரு முட்டாளை முழுமையாக நம்பி அவரை கடவுளைப் போலப் பின்பற்றுபவர்கள் என்று அவர் கூறினார்.
ராகுல் காந்தி தனது உரையில் “முட்டாள்” மற்றும் “அந்த்பக்தர்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியவுடன், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உடனடியாக எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும், ஒரு மாணவரின் பெயரை முன்னிறுத்தி ஆளுங்கட்சியை விமர்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு விளக்கமளித்த ராகுல் காந்தி, “நான் அவையில் இருக்கும் எந்த உறுப்பினரையும் தனிப்பட்ட முறையில் இந்த வார்த்தைகளால் குறிப்பிடவில்லை. ஒரு மாணவர் என்னிடம் கூறிய கதையைத்தான் பகிர்ந்தேன். தேவையெனில் இந்த வார்த்தைகளுக்குப் பதிலாக வேறு வார்த்தையைப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
அதே உரையில், NEET தேர்வு முறைகேடு, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரங்களையும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும், அந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பொறுப்பு என்றும் அவர் நேரடியாக குற்றம்சாட்டினார்.
அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினரை ஏவி மத்திய அரசு அச்சுறுத்துவதாகவும் அவர் விமர்சித்தார். இந்தக் கருத்துகளுக்கும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சலிட்டனர்.
மேலும், “மாணவர்களின் இந்தப் போராட்டம் கோபம், வன்முறை அல்லது வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. அது இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறையின் ஆழ்ந்த ஆதங்கம். நீங்கள் உங்கள் சொந்த குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள்; வீதியில் இறங்கி போராடும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு அவர்களுக்கே ஆதரவு இருக்கும்,” என்று ராகுல் காந்தி கூறினார்.

இதற்கிடையில், பொதுத் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின்படி, தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு ₹10 கோடி வரை அபராதம், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் மூன்று மாதங்களுக்குள் வழக்குகளை முடிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது போன்ற கடுமையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
வினாத்தாள் கசிந்த பிறகு தண்டனை வழங்குவது மட்டுமே இந்த மசோதாவின் நோக்கமாக உள்ளது என்றும், வினாத்தாள் கசியாமல் தடுப்பதற்கான அடிப்படை கல்விச் சீர்திருத்தங்கள் இதில் இடம்பெறவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். அரசின் தோல்வியை மறைக்க உருவாக்கப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கையாகவே இந்த மசோதா இருப்பதாகவும் விமர்சித்தனர்.
விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, குறிப்பிட்ட அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டாம் என்று சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்தியை பலமுறை எச்சரித்தார்.

இதனால் அதிருப்தியடைந்த ராகுல் காந்தி, சபாநாயகரை நோக்கி, “சார்… நீங்கள் ஒரு வேலை செய்யுங்கள். நான் அவையில் என்ன பேச வேண்டும் என்று நீங்களே எழுதி கொடுத்துவிடுங்கள். நான் அதையே அப்படியே வாசித்து விடுகிறேன்,” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிரித்தும், மேசைகளைத் தட்டியும் ஆதரவு தெரிவித்த நிலையில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து, அவையில் கடும் கூச்சல் மற்றும் அமளி நிலவியதால், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
NEET தேர்வு முறைகேடு, மாணவர் போராட்டம், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மற்றும் ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்துகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த விவாதம், நாடாளுமன்றத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலான விவாதத்தை உருவாக்கியுள்ளது.
