அரசுத் துறைகளின் கீழ் இயங்கும் வாரியங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு “யாரையும் சிபாரிசு செய்ய வேண்டாம்; யாருக்கும் சிபாரிசுக்கு வர வேண்டாம்” எனத் தன் அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார்.
அரசு நிர்வாகத்தை முழுமையாகத் தூய்மைப்படுத்தவும், சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ், கொள்கை முடிவுகளை எடுக்கவும், வழிகாட்டுதல்களை வழங்கவும் பல தன்னாட்சி வாரியங்களும், ஆணையங்களும் செயல்பட்டு வருகின்றன.
தமிழக ரியல் எஸ்டேட் ஆணையம், மாநில தகவல் ஆணையம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம். தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகளில் சில தனித்துச் செயல்படுகின்றன. சில அமைப்புகள், சம்பந்தப்பட்ட துறையின் செயல்பாட்டைக் கண்காணிப்பதுடன், துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பது, துறையால் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களுக்கு உதவுவது போன்ற இன்றியமையாத பணிகளை மேற்கொள்கின்றன.
கடந்த காலங்களில், திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, இத்தகைய தன்னாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் ஆளும் தரப்பின் “அரசியல் வெகுமதி” வழங்கும் இடங்களாகவே பார்க்கப்பட்டன.
முந்தைய திமுக ஆட்சியில், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் திமுக கூட்டணியில் இருந்த விசிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பரிந்துரைத்த நபர்களே இப்பணிகளில் நியமிக்கப்பட்டனர். இதனால், இந்த ஆணையங்கள் தங்களின் சுதந்திரமான தன்மையை இழந்து, வெறும் அரசுத் துறையின் ஒரு நீட்சியாகவே செயல்பட்டு வந்தன என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது.
தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அனைத்து வாரியத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக ராஜினாமா செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி, பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தற்போது காலியாக உள்ள புதிய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, த.வெ.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகள், தங்களுக்கு வேண்டியவர்களை இந்தப் பதவிகளில் அமர்த்தக் கோரி, ஆளுங்கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் மூலமாக முதலமைச்சர் விஜயிடம் பரிந்துரை கடிதங்களை அளித்துள்ளனர்.
ஆனால், கூட்டணித் தலைவர்களின் இந்தப் பரிந்துரைகளுக்கு முதலமைச்சர் விஜய் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழக அரசு துறைகளின் கீழ் செயல்படும் பல்வேறு ஆணையங்கள் மற்றும் வாரியங்களின் தலைவர் பதவிகளுக்கு, ‘யாரையும் சிபாரிசு செய்ய வேண்டாம்; யாருக்கும் சிபாரிசுக்கு வர வேண்டாம்’ என, அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு, முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து, அரசு வட்டாரங்கள் கூறுகையில். ”முக்கிய துறைகளை கண்காணித்து, அரசுக்கு ஆலோசனை தெரிவிக்கவே ஆணையங்கள் உள்ளன. ஆனால், ஆணையங்களில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படாததால், அவை துறைகளில் உள்ள ஒரு பிரிவாகவே செயல்படுகின்றன. ஆணையங்களின் செயல்பாடும், அதற்கான முக்கியத்துவம் குறித்தும், முதல்வர் விஜயிடம், மூத்த உயரதிகாரி ஒருவர் விரிவாக தெரிவித்துள்ளார்.
இதனால், நேர்மையான, திறமையான நபர்களை நியமிக்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். எனவே, ‘ஆணையங்களில் சரியான நபர்கள் இருந்தால் தான், துறைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். எனவே, ஆணையங்களின் பதவிகளுக்கு, யாரையும் சிபாரிசு செய்ய வேண்டாம்’ என, கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம், விஜய் தரப்பில் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இப்பதவிகளுக்கு கட்சியினர் யாரையும் பரிந்துரைக்க வேண்டாம் என்று, தன் அமைச்சர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்கின்றனர்.
