Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கரூர் அட்லஸ் கலையரங்க வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் பேசும்போது, “கரூர் துயர சம்பவம் நடந்த நாளன்று போலீஸார் எங்களை அலர்ட் செய்திருக்கலாம் அல்லது கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். அதற்கான அதிகாரம் அவர்களிடம் இருந்தது. அதையெல்லாம் செய்யாமல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து துயரம் நடந்த இடத்துக்கு போலீஸாரே எங்களை அழைத்துச் சென்றனர். அப்போது அது நாடகம் என்று எனக்குத் தெரியாது. அப்போது அவர்களை நான் நம்பிவிட்டேன். பேசும்போது அவர்களுக்கு நன்றியெல்லாம் கூறினேன்.

இதற்கெல்லாம் யார் காரணம்? யார் சொல்லி இதைச் செய்தார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி மாற்றி செயல்படுங்கள் என்று அறிவுறுத்தி, பிரஷர் செய்தது யார்? கரூர் துயரச் சம்பவத்தில் எனது அக்கா, தங்கைகளின் தங்கப் பிள்ளைகளை இழந்திருக்கிறோம். கள்ளம் கபடமற்ற சிரிப்புடைய மழலைகளை இழந்திருக்கிறோம். அக்கா, தங்கை, அண்ணன், தம்பி உறவுகளை இழந்த என்னை ஏளனமாக பேசுகின்றனர். என் மீது பழியைத் தூக்கி போடுகின்றனர். வலி, வேதனையோடு வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளித்து விட்டான் என்று பேசினார்கள்.

வாய் என்று ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? அன்றைய தினம் இருந்த மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்தார்களா? பிரச்சாரம் செய்த இடத்தை நாங்கள்தான் கொடுத்தோம் என்று ஒரு போலீஸ் அதிகாரி பேட்டி கொடுத்தார். வலி, காயங்களை கொடுத்துவிட்டு பழியையும் என்மீது சுமத்தி, அதில் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்.

சட்டப்பேரவையில் ஸ்டாலின் இதைப் பேசி அங்கு ஓர் அரசியல் செய்கிறார். மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடும் அரசியல்வாதி நான் இல்லை. மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் நான். எனக்காக எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டு அரசியலுக்கு வந்தவன். மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வந்தவன்” என்றார் விஜய்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், ”கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.

அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்? திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு…” எனப் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago