Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர், சென்னை கிண்டி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்தபோது, செங்குன்றம் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் அதிரடியாகக் கைது செய்தனர்.

வடசென்னையைச் சேர்ந்த எண்ணூர் தனசேகர் மீது 7 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 52-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டுதல், கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களிலும் அவர் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

எண்ணூர் அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ₹1 கோடி கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காட்டூர் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நிலையில், கிண்டி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்தபோது அவர் சிக்கினார்.

கைது நடவடிக்கையின்போது, எண்ணூர் தனசேகரிடமிருந்து ஒரு துப்பாக்கி, ஒரு சொகுசு கார் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

எண்ணூர் தனசேகர் மீது சென்னை மட்டுமின்றி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

  • 2004ஆம் ஆண்டு எண்ணூர் காளி என்ற காளீஸ்வரன் கொலை வழக்கு.
  • 2005ஆம் ஆண்டு ரெட்ஹில்ஸ் கருப்பு ராஜா கொலை வழக்கு.
  • 2009ஆம் ஆண்டு பெரியமுத்து மற்றும் அசோக் கொலை வழக்குகள்.
  • 2018ஆம் ஆண்டு அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர் ஜேம்ஸ் பால் கொலை வழக்கு.

மேலும், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தனசேகர் சொகுசாகப் பயன்படுத்திய செல்போனை சிறைத்துறை துணை ஜெயிலர் மணிகண்டன் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், துணை ஜெயிலர் மணிகண்டன் மீது தனசேகருக்கு முன்விரோதம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த விரோதத்தின் காரணமாக, கடலூர் மத்திய சிறையில் இருந்தபடியே தனது கூலிப்படையை ஏவி, துணை ஜெயிலர் மணிகண்டனின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி, அவரது குடும்பத்தினரைக் கொலை செய்ய முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் தனசேகர் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியான குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக, எண்ணூர் தனசேகர் மீது இதுவரை 5 முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அந்த வழக்குகளில் அவர் ஓராண்டு சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த எண்ணூர் தனசேகரின் இந்த கைது நடவடிக்கை, சென்னை கிண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது மூலம் அவரது குற்றப் பின்னணி, அவருக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய குற்ற வலையமைப்பு குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago