https://republictn.com/

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக அரசின் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவியிடம் நடந்துகொண்ட விதத்தை கடுமையாக விமர்சித்து, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகாசி அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களின் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்வதாகக் கூறி, அமைச்சர் கீர்த்தனா ஒரு சிறுமியிடம் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்துவதாக உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில அறிவைச் சோதிப்பதாகக் கூறி, குழந்தையை அவமதிக்கும் வகையில் அமைச்சர் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டிய அவர், அமைச்சர் கீர்த்தனாவை “ரீல்ஸ் அமைச்சர்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “ஒரு பிஞ்சுக் குழந்தையிடம் அமைச்சர் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. இது மிகவும் உணர்வற்ற செயல். மாணவர்களிடம் எப்படிப் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை முதலில் அமைச்சருக்கே கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, “குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதுதான் நமது கடமை. அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “உங்களுடைய விளம்பர வெறியை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். சமூக வலைத்தள ரீல்ஸ் மோகத்திற்காக பள்ளிக் குழந்தைகளை பயன்படுத்தாதீர்கள்” என்று அமைச்சர் கீர்த்தனாவுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

One thought on ““கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்ன ஆவாங்க?” – பள்ளி ஆய்வில் கீர்த்தனா விட்ட வார்த்தை.. எகிறிய உதயநிதி..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago